பாலாறு வெள்ள நீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி - சடலங்கள் மீட்பு
வேலூர்: பாலாற்று வெள்ளத்தில் குளிக்கச் செல்லும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
வேலூர் இராணிப்பேட்டை பாலாற்றில் குளிக்க சென்ற ஸ்ரீ ரஞ்சன் என்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானான். அதேபோல செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ராணப்பேட்டை அருகே ஸ்ரீரஞ்சன் என்ற மாணவன், பாலாற்றில் குளிக்கச் சென்றான். வெள்ளநீரில் மாணவனின் உடல் அடித்துச்
செல்லப்பட்டது. பலியான மாணவனின் உடலை தேசீய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர் தேடினர். சிலமணிநேரங்களில் ஸ்ரீரஞ்சனின் உடலை சடலமாக மீட்டனர். ராணிப்பேட்டையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளஸ் டூ மாணவர்கள் பலி
இதேபோல செங்கல்பட்டு அருகே பாலாற்றில் சிக்கி 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். செங்கல்பட்டு அடுத்த, தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் கரண், 17; பிளஸ் 2 மாணவர். அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் வினோத், 18, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர். வியாழக்கிழமையன்று காலை, பாலாற்றில் குளிக்க சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை.
அதன்பின், வருவாய் துறை மற்றும் போலீசார், மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு, ஆத்துார் முட்புதரில், இறந்த நிலையில் சிக்கியிருந்த கரணின் உடலை போலீசார் மீட்டனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று காலை, 9 மணிக்கு, ஆத்துார் அங்காளம்மன் கோவில் அருகில், பாலாற்று பள்ளத்தில் சிக்கியிருந்த வினோத்தின் உடலை போலீசார் மீட்டனர். பாலாற்று வெள்ளத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் பலியாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த கரணின் அண்ணன் விக்னேஷ்குமார் கடந்த வருடம் இதேபோன்று பாலாற்றில் குளிக்க சென்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் இருதினங்களில் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் இரண்டாவது மகன் கிரணும் உயிரிழந்தது அந்த குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.