ராகிங்கில் ஈடுபட்டால் விசாரணை இல்லாமல் கையில் “டிசி”- காந்திகிராம பல்கலைக்கழகம் எச்சரிக்கை
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்து அமைந்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மாணவர்களை ராகிங் செய்தால் எந்த விசாரணையும் இன்றி ராகிங்கில் ஈடுபட்டவர்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய உத்தரவின்படி, ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி காந்திகிராம பல்கலைகழகத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ராகிங் என்ற பெயரில் கல்லூரிகளில் கொடுமையான செயல்களில் மாட்டி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்கள் எத்தனை எத்தனையோ பேர்.
இந்த மோசமான ராகிங் செயலை முற்றிலும் தடுக்கும் விதமாக மத்திய அரசு, மாநில அரசுகள் ராகிங்கை முழுமையாக தடை செய்து அறிவித்து உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக் கழகம் விடுமுறைக்கு பின் கடந்த வாரம் தான் திறக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களின் சேர்க்கை முடிவுபெற்று முதலாம் வருட மாணவர்களின் வருகையும் துவங்கி உள்ளது. இதனால் ராகிங் தொல்லையை முழுவதுமாக ஒழித்துக் கட்ட இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராகிங் ஈடுபடும் மாணவர்கள் எந்த விதமான விசாரணையும் இன்றி பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்படுவர். ராகிங் சம்மந்தமான புகார்களை பல்கலைக் கழக பதிவாளர், மாணவர் நல அதிகாரி, பல்கலைக் கழக துறை தலைவர்கள், பேராசிரியர்களிடம் மாணவர்கள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.