மாட்டுக்காக திரண்டது போல காவிரி நீருக்காக ஒன்று திரள்வோம்... இளைஞர்களுடன் கைகோர்த்த மக்கள்!
சென்னை மெரினா கடற்கரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பொதுமக்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
Recommended Video
சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஒன்று கூடியது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி கடற்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இளைஞர்களுக்கு ஆதரவாக கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக வந்திருந்த பொதுமக்களும் ஒன்று சேர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி 2017 ஜனவரியில் சிறிய அளவில் இளைஞர்கள் சென்னை மெரினாவில் தொடங்கிய போராட்டமானது விஸ்வரூபமெடுத்தது. தமிழர்கள் ஒன்றுகூடினால் யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்பதை நிரூபித்தது மெரினா போராட்டம். இளைஞர்களின் இந்த போராட்டத்தின் வெற்றியாக ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு இந்த ஆண்டு எந்த தடையும் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு சென்னை மெரினாவில் கடற்கரைப் பகுதியில் இளைஞர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களின் இந்த போராட்டம் முகநூலில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இளைஞர்களின் போராட்டம் முகநூலில் நேரலை செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பல இளைஞர்கள் மெரினாவை நோக்கி படையெடுப்பதால் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் விடுமுறை கொண்டாட்டத்திற்காக வந்திருந்த பொதுமக்களும் பங்கேற்றுக் கொண்டு குரல் எழுப்பினர். காவிரி நீரானது விவசாயிகளுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் தான் தேவை என்பதை உணர வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் அந்தப் பகுதி மக்களின் நிலை நாளை நமக்கும் கூட வரலாம் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர். விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் நாங்கள் இங்கு போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம்.
எங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தல் நாங்கள் ஏன் போராட்டத்தில ஈடுபடப் போகிறோம். உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை நிறைவேற்றுங்கள் என்று தான் மத்திய, மாநில அரசுகளை நாங்கள் கேட்கிறோம்.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கும் ஆசையில்லை. போலீசாரின் தடையை மீறி எங்களின் உரிமைக்காகத் தான் நாங்கள் போராடுகிறோம், இது நியாயமான விஷயம் என்பதால் தான் மக்களும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றும் போராட்டத்தில் இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.