வேலூர்: புல்லூர் தடுப்பணையில் கல்லூரி மாணவர்கள் மூழ்கி பலி
வாணியம்பாடி அருகே பாலாற்றில் புல்லூர் தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் மூழ்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புல்லூர் தடுப்பணை நிரம்பி வேலூர் மாவட்ட பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. புல்லூர் தடுப்பணையை பார்வையிடுவதற்காக நாள் தோறும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகிறார்கள்.
தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் ஆபத்து கருதி யாரும் குளிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தை சேர்ந்த கருணா என்பவரின் மகன் அசோக், 21 மற்றும் இவரது நண்பர் ஜமான் கொல்லையை சேர்ந்த தேவராஜ் மகன் அருண்குமார் ,21 இவர்கள் வாணியம்பாடியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தனர்.
ஞாயிறன்று புல்லூர் தடுப்பணைக்கு சென்ற அசோக்கும், அருண்குமாரும் அணையில் இறங்கி குளித்தனர். ஆழமாக இருந்ததால் நீரில் மூழ்கினர். மாணவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்களுடன் புல்லூர் தடுப்பணைக்கு சென்றனர்.
தடுப்பணையில் அவர்கள் மூழ்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டு தேடினர். மேலும் குப்பம் போலீசார் மற்றும் குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அசோக்கின் உடல் மட்டும் சடலமாக மீட்கப்பட்டது. அருண்குமார் கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சம்பவம் குறித்து குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.