பள்ளிச் சீருடையுடன் “புல்” போதையில் சாலையில் மயங்கிக் கிடந்த நாகை மாணவர்கள்!
சீர்காழி: நாகையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் மது அருந்திவிட்டு பள்ளிச் சீருடையிலேயே சாலையில் மயங்கிக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவர்கள் மதுகுடித்துவிட்டு பள்ளி சீருடையில் தெற்கு மாட வீதியில் சாலையில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அப் பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாணவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள கடையில் அமர வைத்தனர்.
இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விசாரணையில் 2 மாணவர்களும் புங்கனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.இதனை தொடர்ந்து மாணவர்களை பெற்றோரால் அழைத்து சென்றனர்.
மாணவர்கள் மது போதையில் சாலையில் கிடந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அதனை பலருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வருகிறார்கள்.இந்த சம்பவம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அதிர்ச்சியினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.