மயிலாடுதுறை: பல்லி விழுந்த சாம்பார் சாப்பிட்ட 41 பள்ளி மாணவ-மாணவிகள் வாந்தி மயக்கம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் பல்லி விழுந்த இட்லி சாம்பார் சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 41 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தில் தனியார் நர்சரி பிரைமரி பள்ளி உள்ளது. இந்த பள்ளி விடுதி மாணவ, மாணவிகளுக்கு பந்தநல்லூர் அருகே உள்ள சோழிய வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து காலை உணவு வாங்கி கொடுப்பது வழக்கம்.
அதேபோல் இன்று இட்லி வாங்கி கொடுத்தனர். இதனை சாப்பிட்ட 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 41 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் 8 ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக பந்தநல்லூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கணேசமூர்த்தி, ரேணுகா ஆகியோர் மயங்கிய நிலையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டலில் வாங்கி கொடுத்த இட்லியில் பல்லியின் தலையும், வாலும் கிடந்ததாக சாப்பிட்ட மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் தான் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மாணவ - மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.