பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்.. கதறி அழுது விடைகொடுத்த மாணவர்கள்.. உருக்கமான வீடியோ
திருத்தணி அருகே பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மாணவர்கள் கட்டிப்பிடித்து வெளியே விடாமல் கண்ணீர் விடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
Recommended Video
திருத்தணி: திருத்தணி அருகே பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மாணவர்கள் கட்டிப்பிடித்து வெளியே விடாமல் கண்ணீர் விடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 260 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியராக உள்ள பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் உள்ளனர்.
தற்போது தமிழக அரசு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமித்தும், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்து வருகிறது. அதே போல் இந்த பள்ளியில் 250 மாணவர்களுக்கு அரசு விதிகளின் படி கூடுதல் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
அதனடிப்படையில் பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன்வாசலுக்கு பூட்டுப் போட்டு பள்ளி முன்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் லட்சுமி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில் உடன்பாடு எட்டாத நிலையில் ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு தெரிவிக்கப்படும் என வட்டாட்சியர் லட்சுமி தெரிவித்தார். ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகே நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி மாணவ மாணவிகளை பெற்றோர் அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவான் பணியிட மாற்ற உத்தரவு நகலை வாங்கிக் கொண்டு செல்ல முயன்றார். அப்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பகவானின் காலை பிடித்துக் கொண்டு இங்கிருந்து நீங்கள் மாறுதலாகி செல்லக்கூடாது நீங்கள் பாடம் நடத்தினால் நாங்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவோம் என்றும் சொல்லிக் கொண்டே கதறி அழுதனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிரியர் பகவான் மன அழுத்தத்தில் உள்ளார். மாணவர்களின் போராட்டத்தால் பாதுகாப்பு பணிக்காக வந்த காவலர்களும் மாணவர்கள் கதறி அழுவதைக் கண்டு செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.