போராட்டத்தை கைவிட மறுத்து சாலையில் அமர்ந்த மாணவர்கள்.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் மாணவர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட மறுத்து சாலையில் அமர்ந்த அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 31வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனைக் கண்டித்து சென்னை கத்திப்பாராவில் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னைக்குள் வாகனங்கள் வருவதற்கான முக்கிய பாலமான கத்திப்பாரா பாலத்திற்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை ஏற்க மறுத்த மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.