மாணவர்களை நல்வழிப்படுத்த உதவுவது.. "சின்ன சாலமன் பாப்பையா" தலைமையில் கலக்கல் பட்டிமன்றம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று மாணவர் பட்டிமன்றம் நடைபெற்றது.
தலைமையாசிரியர் அவர்கள் இப்பட்டிமன்றத்தை துவக்கி வைத்து அனைவரையும் வரவேற்றார். மக்கள் பாதை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கரோலின் அமல்ராஜ், முருகேசன், நாராயணன் மற்றும் தேவராஜன் கலந்து கொண்டனர்.
மாணவர்களை நல்வழிப்படுத்த பெரிதும் உதவுவது கனிவா? கண்டிப்பா? என்ற தலைப்பில் மாணவர்கள் உரையாடினார். பட்டிமன்ற நடுவராக பத்தாம் வகுப்பு மாணவன் சபரிநாதன் இருந்தார். கண்டிப்பு என்றத் தலைப்பில் நவீன், கோமதி, தீபிகா ஆகிய மாணவர்களும், கனிவு என்ற தலைப்பில் சபரிநாதன், பிருந்தா, பிரசாந்த் ஆகிய மாணவர்களும் பேசினர்.
மாணவர்கள் நல்ல தீர்ப்பு நாராயணன், அக்னி அருளானந்தம், அடைமொழி அம்மாகண்ணு, தீப்பொறி ஆறுமுகம், கனல் கந்தசாமி, பொன்னம்மா மின்னல் விண்ணரசி போன்ற அடைமொழியுடன் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
கண்டிப்பானது மாணவர்களுக்கு மனஅழுத்தம், படிப்பில் நாட்டமின்மை, மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டிப்பு என்ற தலைப்பில் பேசிய அணியினரும், கனிவானது மாணவர்களின் பிரச்சனைகளை ஆசிரியர்களிடம் சொல்லும் வாய்ப்பு ஏற்பட்டு, மாணவர்களின் கற்கும் திறன் மேம்படும் என்று கனிவு என்ற தலைப்பில் பேசிய அணியினரும் பேசினர்.
பட்டிமன்ற நடுவராக செயல்பட்ட மாணவர் மாதேஷ், சின்ன சாலமன் பாப்பையா என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். இறுதியாக நடுவர் மாணவர்களை நல்வழிப்படுத்துவது கனிவே என்றுதீர்ப்பு வழங்கினார். தமிழ் மன்ற செயலாளர் ஆசிரியர்சித்ரா அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் மன்ற ஆசிரியர்கள் செய்திருந்தனர்.