சேற்றில் இறங்கி நாற்று நட்டு.. அசத்திய பள்ளி மாணவர்கள்!
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவசாய கல்லூரிக்கு சென்று சேற்றில் இறங்கி நாற்று நட்டனர்.
4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் விவாசய கல்லூரிக்கு களப் பயணமாக சென்றனர் .கல்லூரி தோட்டக்கலை பிரிவு மேலாளர் விக்னேஷ் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். கல்லூரி தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கி பேசுகையில், இளம் மாணவர்களாகிய நீங்கள் இப்போதே விவசாய கல்லூரியில் சேருவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
விவாசயம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும். பயிர் நிலங்கள் அழிந்து கொண்டே வருகின்றன. விவாசயம் செய்தால் நாடு தானாக முன்னேறும். இயற்கை உரம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். விவாசய கல்லூரியில் சேர்ந்து படிப்பதன் மூலம் நாட்டையும், உங்களையும் நன்றாக வளர செய்ய இயலும் என்று பேசினார்.
விவசாய கல்லூரியில் ஆட்டு பண்ணை,கோழி பண்ணை, பன்றி பண்ணை, புறா பண்ணை, மீன் பண்ணை ஆகியவைகளையும், பூச்சியியல் துறை ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகங்களையும், வெண்டிக்காய், பாகற்காய், புடலங்காய் போன்றவை எவ்வாறு பறிப்பது என்பது தொடர்பாகவும் நேரில் கற்று கொண்டனர். சேற்றில் இறங்கி சந்தோஷமாக நாற்று நட்டனர். மாணவர்கள் பார்வையிட்ட இடங்களை பற்றி மாணவர்கள் அய்யப்பன், வெங்கட்ராமன், பாலசிங்கம், காயத்ரி, ஜெயஸ்ரீ, கார்த்திகேயன், பாக்யலட்சுமி, கீர்த்தியா, ஈஸ்வரன், சிரேகா, சந்தியா உட்பட பல மாணவர்களும், ஆசிரியர்களும் பேசினார்கள். பள்ளியின் சார்பாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார். ஆசிரியர் கருப்பையா மாணவர்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
மாணவர் அய்யப்பன் : விவசாய கல்லூரிக்கு வந்து சேற்றில் இறங்கி நாட்டு நற்றது எனக்கு வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி.நான் இதுவரை எனது குறிக்கோளாக போலீஸ், கலெக்டர் ஆக வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.ஆனால் சேற்றில் இறங்கி நாற்று நட்ட பிறகு எனக்கு விவசாயி ஆக வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. இந்த கல்லூரியில் பன்றி பண்ணையில் பன்றி வளர்ப்பதால் அதன் மூலம் நாம் சம்பாதிக்க இயலும் என்று சொன்னார்கள். மேலும் மாட்டு பண்ணையில் காலையும், மாலையும் 12 லிட்டர் கறக்கும் மாடுகளை பார்த்து ஆச்சிரியப்பட்டு போனேன். மாடுகளுக்கு பிஸ்கட் கொடுத்தேன். அவை ஆர்வத்துடன் சாப்பிட்டது கண்டு எனக்கு பிரமிப்பாக இருந்தது. கண்டிப்பாக நான் பிற்காலத்தில் விவசாயியாக வருவேன்,என்று பேசினார்.
மாணவி காயத்ரி: அனைத்து இடங்களிலும் 1330 குறள் தான் பார்த்துள்ளேன். ஆனால் இங்கு கல்லூரியில் 1331வது குறள் எழுதி போட்டு அதில் விவசாயியை பாராட்டி உள்ளனர். புறா குஞ்சு எனது கையில் வாங்கி பார்த்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். நான் இது வரையில் முயல் குட்டி பார்த்தது கிடையாது. இன்று கையில் வாங்கி பார்த்து அதனை பக்கத்தில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. வெண்டைக்காய் பறிக்கும்போது அதனை எவ்வாறு பறிக்க வேண்டும் எனக்கு நன்றாக சொல்லி கொடுத்தனர். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
மாணவி பாக்யலட்சுமி ; பாகற்காய், புடலங்காய் பறித்த அனுபவம் அருமை. செடிகளுக்கு வலிக்காமல் காய்களை பறிக்க கற்று கொடுத்தனர். மீன் பண்ணை பார்த்தோம். மீனுக்கான உணவை தூக்கி போட்ட உடன் அவை வெளியில் வந்து சாப்பிட்டது நன்றாக இருந்தது. மூலிகை தாவரங்கள் பார்த்தோம். ராசிகளுக்கு உள்ள மரங்களையும் பார்த்தோம். சேற்றில் இறங்கி நாற்று நட்டது எனக்குள் புதிய அனுபவத்தை கொடுத்தது.
மாணவி ஜெயஸ்ரீ: மண் புழு உரம் தயாரிப்பது எப்படி,அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை விரிவாக விளக்கினார்கள்.ஸ்பைருலினா தயாரிப்பது எப்படி என்பதையும் விளக்கி சொன்னார்கள்.இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே நான் காலநிலை அறிவது தொடர்பாக பார்த்து வந்துள்ளேன்.ஆனால் இங்கு தெளிவாக அதனை நேரில் காண்பித்து எவ்வாறு மழை பெய்யும் அளவை கணிப்பது ,இன்றைய வெப்பநிலை அளவு என்ன அதன் தொடர்ச்சியான தகவல்களை விளக்கினார்கள்.எனக்கு முழுவதும் புரிந்தது.
மாணவர் வெங்கட்ராமன் : இது வரை செடி எப்படி வளர்கிறது என்று எனக்கு தெரியாது. இன்று ஆய்வகங்களில் தெளிவாக எனக்கு இதனை விளக்கி சொன்னார்கள். காளான் வளர்ப்பது எப்படி,வளர்ந்த காளானை எப்படி விற்கலாம், பஞ்ச காவியம் தயாரிப்பது, மீன் அமிலம்,சாணி உரம் போன்றவை தயாரிப்பது போன்றவற்றை நேரடியாக விளக்கி சொன்னார்கள். இதன் மூலம் நான் வீட்டில் மிச்சமாகும் உணவு வகைகளை வைத்து உரம் தயாரிக்க முயற்சி எடுப்பேன். மண் அறிவியல் ஆய்வகம், பூச்சியியல் துறை ஆய்வகம், பூ, இலை பற்றிய ஆய்வகம், நுண்ணுயிரியனங்கள் பற்றிய ஆய்வகம் போன்றவற்றை நேரில் காண்பித்து தெளிவாக விளக்கினார்கள்.என்று பேசினார்.