அதலபாதாளத்தில் எஞ்சினியரிங், “அப்”ல வரும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்!!
சென்னை: பொறியியல் படிப்பில் சேருவதை விட கலை அறிவியல் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏனெனில், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் காலக்கட்டத்தால் மாணவர்களிடையே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால்,பொறியியல் மோகம் மாணவர்களிடையே குறைந்து கொண்டே வருகின்றது.
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்:
தமிழ்நாட்டில் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேருவதற்கு பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் விண்ணப்பம் பெற்று விண்ணப்பித்து வருகிறார்கள். மருத்துவப்படிப்பில் சேருவதற்கும், கால்நடை அறிவியல் மருத்துவபடிப்பிற்கும் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை மாணவர்கள்:
கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்பில் சேரவும் ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள்.சென்னையைப் பொருத்தவரை ஆண்களுக்கு லயோலா கல்லூரியும், விவேகானந்தா கல்லூரியும் பெரிதாக தெரிகின்றன.
பெண்களின் சாய்ஸ்:
மாணவிகள் சேருவதற்கு ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய கல்லூரிகளில் சேருவதற்கு மிகவும் ஆசைப்படுகிறார்கள்.
இட ஒதுக்கீடு பட்டியல்:
இவற்றில் சில கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகளில் சேர முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 2 ஆவது பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த மாணவர்சேர்க்கை நடக்கிறது.
அதிக மதிப்பெண்
பிளஸ் 2 தேர்வில் அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் தரமான பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். கட்-ஆப் குறைவாக பெற்றவர்கள் சாதாரண பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வேலைக்கு உத்தரவாதம் இன்றி உள்ளனர்.அவர்களில் சிலர் வேலைக்கு முயற்சி செய்து சென்றுவிடுகிறார்கள்.
பி.காம் படிப்பில் சேர கடும் போட்டி:
கலை அறிவியல் படிப்பில் சேருவதற்கு அதிக மதிப்பெண் தேவைப்படுகிறது. பி.காம் படிப்பில் பல வகையான பிரிவுகள் உள்ளன. பி.காம் படிப்பில் சேர அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது.
கலைப் படிப்புகளில் ஆர்வம்:
மேலும் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி. கணிதம், வேதியியல், பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. விஷூவல் கம்யூனிகேசன் போன்ற படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
கடும் போட்டியில் கல்லூரிகள்:
மார்க் குறைந்தாலும் பொறியியல் படிப்பில் சேரலாம். காரணம் நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் வேலைவாய்ப்பை பொருத்தவரை, சாதாரண பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வேலை இன்றி ஏராளமானவர்கள் தவிக்கிறார்கள். இதன் காரணமாக கலை , அறிவியல் படிப்பில் சேர கடும் போட்டி நிலவுகிறது.
ஆங்கிலம் தெரிந்தால் போதும்:
எந்த படிப்பு படித்தாலும் ஆங்கிலத்தில் பேச்சாற்றல் மற்றும் புலமை பெற்றிருந்தால் வேலை உடனடியாக கிடைக்கிறது. எனவே ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க பல கல்லூரிகள் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டன.