மறக்க முடியுமா அம்மா?.... பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண்ணீர் அஞ்சலி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்விக்காக தாயுள்ளத்துடன் ஜெயலலிதா செயல்படுத்திய நலத்திட்டங்களை மாணவர்களும், ஆசிரியர்களும் நெகிச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். ஜெயலலிதா மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 6ம் தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. எனவே இன்று அனைத்து பள்ளிகளிலும் ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதா, ஏழை எளிய மாணவர்கள் தொடக்க கல்வியில் இருந்து உயர்கல்வி பெறுவதற்காக விலையில்லா நோட்டு புத்தகங்களில் தொடங்கி வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அவரது நினைவை போற்றும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாணவர்கள் அஞ்சலி
சென்னை மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் அமைச்சர் திரு. க.பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் ஆர். கஜலட்சுமி உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று இறைவணக்கத்தின் போது மாணவிகளும், ஆசிரியப்பெருமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அம்மாவுக்கு மலரஞ்சலி
மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பாப்புநாயக்கன்பட்டியில் உள்ள எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களும், நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மவுன அஞ்சலி
காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மறைந்த முதல்வருக்கு மாணவ - மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
கண்ணீர் அஞ்சலி
விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மவுன அஞ்சலி செலுத்தியதுடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மாணவர்கள் நெகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாணவ -மாணவிகள் ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.