ஸ்தம்பித்தது புதுவை.. ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகை!
அனிதாவுக்கு நீதி கோரி புதுவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.
புதுச்சேரி: அனிதாவுக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.
தமிழகம், புதுவை மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை உலுக்கியிருக்கிறது மாணவி அனிதாவின் தற்கொலை. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டே ஆக வேண்டும் என வலியுறுத்தி தமிழகம், புதுவையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மாபெரும் பேரணி
புதுச்சேரியில் அனைத்து மாணவர் அமைப்புகள், திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.
தடுத்து நிறுத்தம்
ஆனால் பேரணி ஆளுநர் மாளிகை முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பாக அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
தடையை உடைக்க முயற்சி
திடீரென மாணவர்கள் போலீஸ் தடையை உடைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
போராட்டம் தொடரும்
இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு திரும்ப கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.