பஸ் கட்டண குறைப்பை நிராகரித்த மாணவர்கள்.. ஓயாத தொடர் போராட்டம்!
தமிழக அரசின் பஸ் கட்டண குறைப்பை நிராகரித்து கல்லுரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு: தமிழக அரசின் பஸ் கட்டண குறைப்பை நிராகரித்து கல்லுரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. 60 சதவீதத்துக்கும் மேலான கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு நேற்று குறைத்து அறிவித்தது.
திருப்தியளிக்கவில்லை
ஆனாலும் கட்டண குறைப்பு மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. பல இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பல இடங்களில் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வகுப்பு புறக்கணிப்பு
இந்நிலையில் கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி கட்டணத்தை விட
கல்லூரி கட்டணத்தை விட பேருந்து கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். பஸ் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போராட்டம் தொடரும்
இதேபோல் நாகர்கோவிலிலும் இந்து கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.