மெரீனா பீச்சுக்கு எந்தப்பக்கம் கேட் போடுவது?.... கடலில் இறங்கும் இளைஞர்களால் போலீஸ் பீதி
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் கடலில் இறங்கி போராடுவதால் போலீசார் தவித்து வருகின்றனர்.
சென்னை: மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டாலும் கடலுக்குள் இறங்கி மாணவர்கள் போராடி வருவதால் சென்னை போலீசார் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு புரட்சிக்குப் பிறகு சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. 10 இளைஞர்கள் கடற்கரையில் கூடினாலே கேள்வி கேட்டு உடனடியாக அவர்களை வெளியேற்றி வருகின்றனர் காவல்துறையினர்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுக்குள் குதித்த இளைஞர்கள்
மெரீனாவில் கூட இளைஞர்களுக்கு தடை விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும், போலீஸ் தடையையும் மீறி இன்று இளைஞர்கள் திருவள்ளுவர் சிலை அருகே கடலுக்குள் இறங்கினர். விவசாயிகளை பாதுகாப்போம் தண்ணீரை பாதுகாப்போம்' என முழங்கியபடி கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆபத்தான போராட்டம்
கடும் போலீஸ் கண்காணிப்பையும் மீறி இளைஞர்கள் கடலில் இறங்கி போராடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவான தங்களது போராட்டம் மேலும் வலுப்பெறும் என போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் உறுதியாக கூறினர். விவசாயிகளுக்கு ஆதரவான பல போஸ்டர்களையும் அவர்கள் வைத்திருந்தனர்.
கைது செய்த போலீஸ்
போராட்டம் நடத்திய இளைஞர்களை ஒவ்வொருவராக காவல்துறையினர் கரைக்கு இழுத்து சென்றனர். போராடிய இளைஞர்களில் 5 பேர் மட்டும் காவல்துறையினர் அருகில் இழுத்து செல்ல வந்தால் ஆழ்கடல் நோக்கி முன்னேறிச் சென்றனர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
நெடுவாசலை மூடுவோம்
வாடிவாசலை திறக்க போராடிய நாம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மூடவும் போராட்டம் நடத்த வேண்டும் என முழக்கமிட்டபடியே கைதான இளைஞர்கள் மெரீனா கடற்கரை காவல் நிலையத்திற்குள் சென்றனர்.
பீதியில் போலீஸ்
பீதியில் போலீஸ் மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும் தடையையும் மீறி மாணவர்கள் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்குவதால் போலீசார் பீதியடைந்துள்ளனர். கடற்கரையில் குவியும் மாணவர்கள், இளைஞர்களை தடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.