சென்னை- பள்ளி வகுப்பறையை நொறுக்கிய மாணவர்கள் - தலைமை ஆசிரியரை மாற்றியதால் ஆத்திரம்
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்.சி.டி.எம் பள்ளியில் தலைமை ஆசிரியரை மாற்றியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், அங்கு வைத்திருந்த பேனர்கள், போர்டுகளையும் அடித்து நொறுக்கினார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புரசைவாக்கத்தில் எம்.சி.டி.எம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு பழமையானது. முத்தையா செட்டியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அரசு உதவி பெறும் இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், பள்ளியின் நிர்வாகம் வேறு ஒரு தரப்பிற்கு மாறியதாக கூறப்படுகிறது.
ஏழை மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியரையும், 5 ஆசிரியர்களையும் பணியில் இருந்து புதிய நிர்வாகம் நீக்கியுள்ளது. இந்நிலையில், பணிக்கு வந்த புதிய தலைமை ஆசிரியர், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல், இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்தாக தெரிகிறது.
இது குறித்து கருத்து கூறிய மாணவர்கள், பள்ளி வகுப்பறைக்கு ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை என்றும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மாணவர்களை ஹிந்தி வகுப்பில் சேரும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் வகுப்பறை மீது கல் வீசப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
போராட்டம் காரணமாக பள்ளி வளாகம் போர்களம் போல மாறியது. போலீசார் விரைந்து வந்து மாணவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி செய்தனர்.
இதையொட்டி முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் நிர்வாகத்துடனும் ஆசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டத்தையொட்டி பள்ளிக்கூடம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பள்ளியை மூடிவிட்டு ஷாப்பிங் காம்ளக்ஸ் கட்ட முடிவு செய்துள்ளதாகவும், தலைமை ஆசிரியர் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதனை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
மிகப்பெரிய பள்ளி, நல்ல நிர்வாகம் என்பதால் வெகு தொலைவில் இருந்து கூட வந்து ஏழை மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். திடீரென ஆசிரியர்களும், நிர்வாகத்தினருக்கும் இடையே எழுந்துள்ள இந்த பிரச்சினையால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்று கவலைப்படுகின்றனர் பெற்றோர்கள்.
போராட்டம் தொடர்பாக வகுப்புகள் நொறுக்கப்பட்டது, பொருட்கள் உடைக்கப்பட்டது குறித்து வேப்பேரி போலீசில் பள்ளி தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்து உள்ளார். பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.