நர்சிங் விண்ணப்பம் வழங்குவதில் மோசமாக குளறுபடி... தூத்துக்குடியில் மாணவிகள் தர்ணா!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நர்சிங் விண்ணப்பம் வழங்குவதில் குளறுபடி இருப்பதை கண்டித்து மாணவிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் தூத்துக்குடியில் பாளை ரோட்டில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடப்பு கல்வி ஆண்டில் நர்சிங் பட்டபடிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆன் லைனிலும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் விண்ணப்ப படிவங்கள் வாங்க வந்த மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் விதிமுறையை மீறி அலுவலகம் முடியும் நேரத்தில் சில மாணவிகளுக்கு மட்டும் விண்ணப்பம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலை விண்ணப்பம் படிவம் வாங்க முடிவு செய்த மாணவிகள் மருத்துவ கல்லூரி முன் திரண்டனர். ஆனால் அப்போதும் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை.
இதனால் வெகுண்ட அவர்கள் திடீரென பாளை ரோட்டில் மருத்துவ கல்லூரி எதிரே மறியல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் ஆலோசனை செய்து வந்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டது.
இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் பாளை ரோட்டில் சுமார் கால் மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.