இன்னும் முடியாத பள்ளிகள்.. வெயிலில் வாடிச் சுருளும் மாணவர்கள்!
சென்னை: தமிழகத்தில் இன்னும் அரசுப் பள்ளிகள் முடியவில்லை. வருகிற 21ம் தேதி வரை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்குவதால் மாணவர்கள்தான் கடும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மார்ச் மாத வாக்கில் வெயில் தொடங்கும். ஏப்ரலில் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் மே மாதத்தில் வெளுத்துக் கட்டும். ஆனால் இந்த ஆண்டோ மார்ச்சிலேயே கடும் வெயில் தொடங்கி விட்டது. தற்போது அக்னி நட்சத்திர காலத்தில் உள்ளதைப் போல வெயில் கொளுத்துகிறது.
வீட்டுக்குள் இருக்க முடியவில்லை. வெளியிலும் போக முடியவில்லை. அப்படிக் கொளுத்துகிறது வெயில். இந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் இன்னும் முடியாமல் இருப்பதால் பெற்றோர்களும், மாணவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
பிளஸ்டூ, 10வது வகுப்பு முடிந்தது
தற்போது தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் முடிந்து விட்டன. 10ம் வகுப்பு தேர்வுகளும் முடிந்து விட்டன. பள்ளிகளில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிறப்பு வகுப்புகள் தொடங்கி விட்டன.
21ம் தேதி வரை பள்ளிகள் இயங்கும்
அரசுப் பள்ளிகள் மற்றும் பல தனியார் பள்ளிகளில் இன்னும் பள்ளிகள் முடியவில்லை. வரும் 21ம் தேதி வரை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சிரமம்
இதனால் மாணவர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். தமிழகத்தின் பல நகரங்களிலும் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உடல் ரீதியாக சோர்வடைந்து வருகின்றனர். இதனால் பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.
22ம் தேதி முதல் விடுமுறை
இந்தப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 22ம் தேதி தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதேபோல், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இம்மாதம் 30-ம் தேதி வரை செயல்படும் என்றும், வரும் 1-ம் தேதி முதல் இப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல்
கோடை விடுமுறைக்குப் பின்னர், மெட்ரிகுலேசன் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பல தனியார் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.