மாணவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் விவசாயிகள், மீனவர்களுக்கு உதவ வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை
மாணவர்கள் எப்போதும் விவசாயிகள், மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று மயில்சாமி அண்ணாத்துரை கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி : மாணவர்கள் எந்தத்துறையில் பணியில் சேர்ந்தாலும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தங்களால் இயன்ற அளவிற்கு உதவ வேண்டும் என்று இஸ்ரோவின் இயக்குநரான மயில்சாமி அண்ணாத்துரை கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி சீதா லட்சுமி ராமசாமி கல்லூரியின் 67வது ஆண்டு விழா இன்று நடந்தது. அதில் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, பள்ளி,கல்லூரிகளில் விடுமுறைகள் அதிகம் இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே போட்டி உருவானால் தான் கல்வித்தரம் மேன்மேலும் உயரும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தாவரங்களும் விலங்குகளும் பரிமாண வளர்ச்சி பெறவில்லை. மனித குலம் மட்டுமே பல்லாயிரம் ஆண்டுகளாக பரிமாண வளர்ச்சி பெற்றுள்ளது. மனித சமுதாயம் வளர்ச்சி பெற நாம் கற்ற கல்வியே உறுதுணை செய்கிறது.
திருச்சி மாநகரம் இந்தியாவின் தூய்மை நகரப் பட்டியலில் முதலிடம் பெற மாணவர்கள் தங்களால் இயன்றளவு சுற்றுப்புற தூய்மையை பேண வேண்டும். நாடு தூய்மையாக இருந்தால் நாட்டு மக்களின் எண்ணம் தூய்மையானதாக மாறும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் படித்துப் பணிக்குச் செல்லும் மாணவர்கள் தாங்கள் எந்தத் துறையில் பணியில் சேர்ந்தாலும், தங்கள் துறை வாயிலாக விவசாயிகள், மீனவர்கள் என பல தரப்பினருக்கும் தங்களால் இயன்ற நன்மைகளை செய்ய வேண்டும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.