விடாது கருப்பு: இன்று மாலை தஞ்சை வரும் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட மாணவர்கள் திட்டம்
தஞ்சை வரும் ஆளுநருக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்ட மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் : தஞ்சை கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலின் பிரமோற்சவ விழாவின் கருடசேவையில் பங்கேற்க தஞ்சாவூர் வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு கருப்புக்கொடி காட்ட மாணவர்கள் முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கல்யாணபுரத்தில் சீனிவாச பெருமாள் கோவிலின் பிரமோற்சவ நிகழ்வு கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று இரவு நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து கார் மூலமாக தஞ்சாவூர் வரவுள்ளார்.
இரவு 7 மணிக்கு தஞ்சாவூர் வரும் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் சுவாமி தரிசனம் முடித்து, 300வது ஆண்டு கருடசேவை நிகழ்வைத் துவக்கி வைக்கவுள்ளதாக அவரது பயணக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தி வரும் மத்திய அரசுக்கும், அதற்கு உரிய அழுத்தம் தரத் தவறிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல்வேறு விவசாய மற்றும் மாணவ அமைப்புகள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே, நேற்று பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதால், மிரண்டு போய் இருக்கும் காவல்துறை மாணவர்களின் இந்த அறிவிப்பால் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.