தூய்மை இந்தியா : கோவில்பட்டி மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு
தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கோவில்பட்டி மாணவர்கள் ஸ்கேட்டிங் ஓட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி: தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் கோவில்பட்டியில் கண்ணை கட்டிக்கொண்டு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஓட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது, திறந்தவெளியில் அசுத்தம் செய்ய கூடாது, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தியும், தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் இந்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சி.கே.டி. மெட்ரி பள்ளி மாணவர் சுதர்சன் தன் வயிற்றில் ரோப் கட்டி ஸ்கேட்டிங் மூலம் காரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்தும், தர்ஷன் குப்தா, கே.ஆர்.ஏ மெட்ரிக்குலேசன் பள்ளியை சேர்ந்த நித்தோஸ் பாலாஜி, ஹரிஸ்குமார், பிரசன்னா வெங்கடேஷ் எடுஸ்டார் இண்டர்நேஷனல் பள்ளி ஆகிய 4 மாணவர்கள் கண்களை துணியால் கட்டி கொண்டு பின்னோக்கி ஸ்கேட்டிங் சென்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் வடக்கு திட்டங்குளம் சந்திப்பில் இருந்து புறப்பட்ட இந்த ஸ்கேட்டிங் ஓட்டம், கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சிக்கு சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அன்ட் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொருளாளர் யுவராஜன், தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்கேட்டிங்கை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் எஸ்.ஐ. குருசந்திரவடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில், சவுத்இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் மகளிர் பிரிவு தலைவி மகாலட்சுமி, செயலாளர் ஆண்டாள், நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் தங்கமாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி ஸ்கேட்டிங்கில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.