அனிதாவுக்காக போராடிய திருநங்கைகள், மாணவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு!
சென்னையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர்களும் திருநங்கை இருவரும் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையிலுள்ள இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 2 திருநங்கைகள் மற்றும் 10 மாணவர்களை ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவின் கீழ் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரியும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொறியியல் மாணவி திருநங்கை கிரேஸ் பானு உள்ளிட்ட 12 பேர், சென்னை கிண்டியில் உள்ள இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
அதனையடுத்து போலீசார், இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத ஐபிசி143, 353,188, 447 ஆகிய பிரிவின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ளது. இந்த அமைச்சகம் 'வேர்ல்ட் டிரேட் ஆர்கனைசேஸன்' உடன் செய்துகொண்ட ஒப்பத்தந்தின் காரணமாகத்தான் கல்வி சேவைத் துறையிலிருந்து, தனியாருக்கு மாற்றப்பட்டது. ஆகையால் அதை ரத்துச் செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் கைது செய்யபப்ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.