'மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு மீண்டும் வாய்ப்பிருக்கிறது’.. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டம் அதற்கு பின்னர் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தந்தி டிவியில் பேட்டியளித்த மயிலாப்பூர் டிசி பாலகிருஷ்ணன் எதிர்காலத்தில் அமைப்பு, தலைமையில்லாத போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர மெரினா கடற்கரையில் கூடியிருந்த மாணவர்களுக்கு போலீசார் நெருக்கடி கொடுத்தனர். அதனை ஏற்க மாணவர்கள் மறுத்த போது, தடியடி நடத்தி கலைத்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை நடு குப்பம், அம்பேத்கர் பலம், ரூதர் நகர், அயோத்திய குப்பம் என பல்வேறு இடங்களில் கல் எரிதல், தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் போலீசாரே தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.
தந்தி டிவியில் இதுதொடர்பான கேள்விகளுக்கு டிசி பாலகிருஷ்ணன் பதில் அளித்தார். அப்போது, தீ வைத்த போலீசார் யாராக இருந்தாலும், வீடியோவின் உண்மை தன்மையை அறிந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எந்த நடவடிக்கை எடுத்தாலும் முழு விசாரணைக்குப் பின்னரே எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நெறியாளர் பாண்டே, அரசியல் தலைமை இல்லாத, அமைப்பு சாராத, தலைமை இல்லாத போராட்டங்கள் எதிர்க்காலத்தில நடக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, 'வாய்ப்பிருக்கிறது' என்று பாலகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ் நாட்டில் தன்னெழுச்சியான போராட்டங்கள் எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று பாலகிருஷ்ணன் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரிமாறப்படுகிறது. அதனைக் கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும் என்றும் மயிலாப்பூர் டிசி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.