மோடி பதவி ஏற்பு விழா.. கலந்து கொள்ளக்கூடாது எனக் கோரி ரஜினி வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்
சென்னை: நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன் மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இன்று நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். இந்த விழாவுக்கு வருமாறு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பியுள்ளார்.
ஆனால் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு செல்வதில்லை என ஏற்கெனவே முடிவு செய்திருந்தார். அவர் இன்னும் மைசூரில் லிங்கா படப்பிடிப்பில் உள்ளார்.
இந்த நிலையில், அவர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என்று கோரி, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்குச் செல்லும் சாலையை மறித்தபடி சிலர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கையில் எதிர்ப்பு அட்டைகளைப் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.
அங்கிருந்த போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரையும் விடுதலை செய்தனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ரஜினி வீட்டில் இல்லை.