இலவச லேப்டாப் இல்லை.. பிளஸ் 1-ல் கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்
சென்னை: தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா லேப்டாப் கிடைக்க வாய்ப்பில்லாததால் பிளஸ்-1 கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத சூழல் உருவாகியுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து வகை அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கம்யூட்டர் சயின்ஸ் ஒரு பாடமாகக் கொண்ட பல பிரிவுகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு வரை இந்த பிரிவில் மாணவர்கள் போட்டி போட்டு சேர்ந்து வந்தனர். ஆனால், இந்தாண்டு அரசுப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மட்டுமே இந்த பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கை இருந்து வருகிறது.
அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு சுயநிதிப் பிரிவாகவே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அரசின் கொள்கை முடிவு காரணமாக சுயநிதி கணினி அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவதில்லை.
ஆனால், அதே பள்ளியில் மற்ற பிரிவை எடுத்து படிக்கும் அனைத்து மாணவர், மாணவிகளுக்கும் அரசின் விலையில்லா லேப்டாப் கிடைக்கும் நிலையுள்ளது. இதன் காரணமாக கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை எடுக்க மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது.
அதே சமயம் தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் உள்ளிட்டவை சுயநிதி கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் வழங்க முன்வர வேண்டும் என பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.