தீவிரவாத தாக்குதல் அபாயத்தில் சென்னை – ஆய்வில் “திடுக்” தகவல்
சென்னை: சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளதாக வெளியான புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் "வெரிஸ்க் மேபிள் கிராப்ட்" என்று ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் உலக ஆபத்து பகுப்பாய்வு நிறுவனம் ஆகும்.
அதாவது உலகமெங்கும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான ஆபத்து உள்ள நகரங்களை ஆராய்ந்து அறிந்து வங்கிகளுக்கும், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் தகவல்கள் கூறுவதில் இந்த நிறுவனம் பிரபலமானது ஆகும்.
அவர்களின் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு மிதமான வாய்ப்புள்ள நகரங்களில் பட்டியலில் சென்னை உள்ளது. இதில் சென்னை 176 ஆவது இடத்தில் உள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு குறைவான வாய்ப்புள்ள நகரங்கள் பட்டியலில் மும்பை, டெல்லி, கொல்கத்தா இடம் பிடித்துள்ளன. இவற்றில் மும்பை 298வது, டெல்லி 447வது, கொல்கத்தா 212வது இடங்களில் உள்ளன.
இந்த ஆய்வில் ஏற்கனவே தீவிரவாத தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளாகி வந்துள்ள மும்பை நகரை விட சென்னை நகரில் தாக்குதல் ஆபத்து அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.