அதிமுக அரசு டெல்லிக்கு தலையையும், தமிழருக்கு வாலையும் காட்டிக்கொண்டிருக்கிறது - உதயகுமார் தாக்கு
சென்னை: அ.தி.மு.க. அரசு டெல்லிக்கு தலையையும், தமிழருக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறது. போராட்டங்களை அடக்காமல் விட்டுவிட்டால், எங்கே நமது அரசு கலைக்கப்பட்டுவிடுமோ, ஆட்சியை இழந்து விடுவோமோ, பணம் பண்ண முடியாதோ என்கிற பயத்தில் நமது அரசு நம்மையே காட்டிக் கொடுக்கிறது என பச்சை தமிழகம் கட்சி தலைவர் உதயகுமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சுப.உதயகுமார் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழர் உரிமைக்காக அற்புதமாக வெகுண்டெழுந்து போராடும் இளைஞர்களே, மாணவர்களே உங்களை மனமாரப் பாராட்டி மகிழ்கிறோம்.உங்கள் மீது தடியடி நடத்தி, பொய் வழக்குகள் போடும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். அ.தி.மு.க. அரசு தில்லிக்குத் தலையையும், தமிழருக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறது. போராட்டங்களை அடக்காமல் விட்டுவிட்டால், எங்கே நமது அரசு கலைக்கப்பட்டுவிடுமோ, ஆட்சியை இழந்து விடுவோமோ, பணம் பண்ண முடியாதோ என்கிற பயத்தில் நமது அரசு நம்மையே காட்டிக் கொடுக்கிறது.
தமிழ் மக்களோடு நின்றால் முன்பு இருந்ததைவிட அதிக இடங்களோடு மக்கள் நம்மை தேர்ந்தெடுப்பார்கள் என்கிற நம்பிக்கை, தைரியம் இவர்களுக்குக் கிடையாது. கடந்த 2009-ஆம் ஆண்டு இதேத் தவறை கருணாநிதி செய்தார். ஆட்சியைத் தூக்கி எறிந்திருந்தால், தமிழர்கள் அவரை அப்பா என்று கொண்டாடியிருப்பார்கள், அரசு அதிகாரத்தை இன்னும் அசுர பலத்தோடு திருப்பி அளித்திருப்பார்கள். என்ன செய்ய, திராவிடக் கட்சிகள் எல்லாம் பணத்தையும், பதவிகளையும் தக்கவைப்பதிலேயேக் குறியாக இருக்கின்றனவே?
தில்லியும், மோடிகளும், உச்சா நீதிமன்றங்களும், சூப்பிர முனிய சாமி முட்டாள்களும், பீட்டாக்களும், சோட்டாக்களும் எல்லாம் "தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்று தெரிந்து கொண்டனர். இது நமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!
இதுவரை அனைத்தும் நலமாகவே நடந்திருக்கின்றன. இனி என்ன செய்வது என்பதுதான் முக்கியம். போராட்டம் நடக்கும் ஒவ்வொரு ஊரிலும், களத்திலும் ஒருங்கிணைப்புக் குழுக்களை தேர்வு செய்யுங்கள். நமது தேவைகள் என்னென்ன என்பவற்றைப் பட்டியலிடுங்கள்; அவற்றுள் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுங்கள். அவை நடைமுறை சாத்தியமானவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தெளிவான, தீர்க்கமான கோரிக்கைகளாக முன்வையுங்கள்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குளங்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும்.
குடிநீர் ஆதாரங்களைத் துலக்க வேண்டும். அணுமின் நிலையங்கள், மீத்தேன், கெயில், நியூட்ரினோ திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். ஆற்றுமணல், தாதுமணல், மலைத் திருட்டுக்களை நிறுத்த வேண்டும்,திருட்டு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும். என ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.
மத்திய, மாநில உளவுத்துறைகளும், புலனாய்வுத் துறைகளும், காவல் துறைகளும், ஏவல் துறைகளும் உங்களைப் பிரித்தாள, பயம்காட்ட, பின்வாங்கச் செய்ய ஆவன அனைத்தும் செய்வார்கள். சாதி, மதம், பணம், தரகுத் தலைவர்கள், பொய் குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுப்புவார்கள். வீழ்ந்து விடாதீர்கள்.
கார்ப்பரேட் கைக்கூலிகள் உங்களை அவ்வளவு எளிதில் வெற்றிபெற விடமாட்டார்கள். ஆனால் நீங்கள் இந்தப் போராட்டத்தை ஓர் அரசியல் களமாக்கி, ஊழல் பேர்வழிகள், ஊதாரிகள், உதவாக்கரைகள் அனைவரையும் இனம்கண்டு, புறந்தள்ளி அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும்.
நம்பிக்கை நட்சத்திரங்களே, வாருங்கள், சினிமா நடிகர்களும், அரசியல் நடிகர்களும நம்மை ஆண்டது போதும், சுரண்டியது போதும், உங்களுக்குள் இருக்கும் காமராசர்கள், கக்கன்கள், ஜீவாக்கள், லூர்தம்மாக்கள், காயிதேமில்லத்கள் புறப்பட்டு வெளியே வாருங்கள், தமிழர் நாட்டைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.