மோடி வருகை.. பாதுகாப்புப் பணிக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்
கோவை: கோவையில் பிரதமர் மோடி வருகையொட்டி பாதுகாப்புக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கோவைக்கு நாளை பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இதனையொட்டி அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானம் மற்றும் கோவை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்தும் போலீசார் இன்று காலை கோவையில் நடக்கும் கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வாகனத்தில் புறப்பட்டனர். இதில் சேலூர் மட்டம் போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நேரு என்பவரும் பயணம் செய்தார்.
மேட்டுப்பாளையம்-துடியலூர் இடையே வந்தபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சக போலீசாரிடம் கூறி சிறிது நேரத்தில் நேரு மயங்கினார். அதிர்ச்சியடைந்த மற்ற போலீசார் அதே வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு நேருவை கொண்டு வந்தனர்.
அங்கு அவரிடம் பரிசோதித்த டாக்டர் நேரு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.