விவாதங்களில் நாகரிகமின்றி, மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பிரமுகர்கள்- சுப.வீ. குற்றச்சாட்டு
விவாதங்களில் நாகரிகமின்றி ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார அமைப்பு பிரமுகர்கள் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: டிவி விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ். பாஜக பிரமுகர்கள் பிற கருத்துகளை சொல்லவிடாமல் தடுத்து அடாவடித்தனமாக மிரட்டல் தொனியில் விவாதங்களை திசை திருப்புவதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட விவாதங்களில் பங்கேற்போர் குற்றம்சாட்டியுள்ளனர்.
திராவிட இயக்க தமிழர் பேரவை அலுவலகத்தில் டிவி விவாதங்களில் பங்கேற்போரின் கலந்தாய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, திமுகவின் பொள்ளாச்சி மா. உமாபதி, பரந்தாமன், தி.கவின் கலி பூங்குன்றன், அருள்மொழி உள்ளிட்ட 14 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எழுத்தாளர்களுமாகிய நாங்கள் ஊடகங்களின் அழைப்பை ஏற்று பல்வேறு தொலைக்காட்சிகள் நடத்தும் சமூக, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று எங்களின் பார்வைகளையும் கருத்துகளையும் பதிவு செய்து வருகிறோம்.
அந்த விவாதங்களில் பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர் பிறர் தம் கருத்துகளைச் சொல்லவிடாமல் தடுத்தும் நாகரிகமின்றியும் அடாவடித்தனமாகவும் மிரட்டல் தொனியிலும் விவாதத்தைத் திசை திருப்பும் போக்கில் உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்வைத்தும் பேசி வருகின்றனர்.
தொலைக்காட்சியில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் இப்போக்கினைத் தொலைக்காட்சியினர் முறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அவ்வாறின்றி ஒருபக்கச் சார்பாகவே நடந்து கொள்வார்களெனில், அத்தகைய தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பங்கேற்பது குறித்து நாங்கள் பரிசீலனை செய்ய நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.