ரூ750 கோடி வங்கி கடன் மோசடி: சுபிக்ஷா உரிமையாளர் சுப்ரமணியன் கைது!
13 வங்ககளிடம் இருந்து ரூ. 750 கோடி கடன் வாங்கிய வழக்கில் சுபிக்ஷா நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை : 13 வங்கிகளிடம் இருந்து ரூ. 750 கோடி மோசடியாக கடன் வாங்கிய வழக்கில் சுபிக்ஷா நிறுவன உரிமையாளர் சுப்ரமணியனை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்பொருள் அங்காடிகளாக செயல்பட்டு வந்தது சுபிக்ஷா. இதன் உரிமையாளர் சுப்பிரமணியன் கடந்த 1997ல் ரூ.1200 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் கடந்த 2009ல் திடீரென முடங்கியது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ரூ.40 கோடி வரை திருப்பி செலுத்தவில்லை என்ற புகாருக்கு உள்ளானார்.
இந்நிலையில் நிதி நிறுவனம் தொடங்கி 4000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.150 கோடி வரை பெற்று அனைவரையும் ஏமாற்றியதாக கூறப்பட்ட புகாரையடுத்து சுப்ரமணியன் தலைமறைவானார். கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாக சுப்பிரமணியன் மீது அதிக அளவிலான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இதனிடையே சென்னையில் சுப்ரமணியனை இன்று அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 13 வங்கிகளிடம் மோசடியாக ரூ.750 கோடி கடன் பெற்ற வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.