ஐடி இருந்தால்தான் ரஜினியைப் பார்க்க முடியுமாம்.. ரொம்ப ஓவரா இருக்கே!
ரஜினி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டும்தான் நடிகர் ரஜினியுடன் நாளை போட்டோ எடுத்துக்கொள்ள முடியும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் நாளை போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் வருடத்துக்கு ஒருமுறை தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த சில வருடங்களாக இந்த சந்திப்புகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் 2.ஓ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்றும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து அவருக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கடிதங்கள் எழுதினார்கள். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த மாதம் ரசிகர்களைச் சந்திக்க ரஜினிகாந்த் முடிவு செய்தார்.
தனித் தனியாக போட்டோ
ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்வது சாத்தியமில்லை என்பதால், அந்தச் சந்திப்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சி தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
10 மாவட்ட ரசிகர் மன்றப் பிரதிநிதிகள்
தற்போது, முதல் கட்டமாக 10 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அதன்படி, முதலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சை, கரூர் ஆகிய 10 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.
ராகவேந்திரா கல்யாண மண்டபம்
இந்த சந்திப்பு, சென்னை கோடம்பாக்கம் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில், அதே ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்திக்கிறார். நாளை முதல் 19-ம் தேதி வரை, தொடர்ந்து 5 நாட்கள் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
கண்டிப்பான உத்தரவு
இது தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும் என்று தெரிவித்துள்ளார்.
ரொம்ப ஓவரா இருக்கே!