தற்கொலைக்கு முன்பு 13 பேருக்கு கடிதம் எழுதிய சுப்ரமணியம் - பகீர் திருப்பம்
விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியம் தற்கொலை கடிதத்தை 13 பேருக்கு அனுப்பியுள்ளார்.
நாமக்கல்: விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியம் தற்கொலை கடிதத்தை 13 பேருக்கு அனுப்பியுள்ளார். முதல்வர், விஜயபாஸ்கர், வருமான வரி அதிகாரிகள் 5 பேர், மற்றும் 5 நண்பர்களுக்கு சுப்பிரமணியம் கடிதம் அனுப்பியுள்ளார்.
விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியம் கடந்த 8ம்தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பாக எழுதிய 4 பக்க கடிதம் வியாழக்கிழமையன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கான்ட்ராக்டர் பி.எஸ்.கே. தென்னரசு மற்றும் வருமான வரித்துறை துணை இயக்குனர் கார்த்திக் மாணிக்கம் ஆகியோர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
சுப்ரமணியம் தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தற்கொலை கடிதம்
தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியத்தின் வீட்டில் இருந்தே கடிதம் எடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை கடிதம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிபிசிஐடி டிஎஸ்பி சத்தியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 பேருக்கு கடிதம்
தற்கொலைக்கு முன்பாக 6ஆம் தேதியன்று கடிதம் எழுதியுள்ளார் சுப்ரமணியம். இதில் அவர் அந்த கடிதத்தை முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி, ஐஜி, சுப்ரமணியம் நண்பர்கள் என மொத்தம் 13 பேருக்கு அனுப்பியுள்ளார். அவர் எழுதியது 4 பக்க கடிதம் என்று போலீஸ் சொல்லுகிறது. அவர் கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பினாரா? அப்படி எனில் ஜெராக்ஸ் எங்கே எடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
48 மணிநேரம்
கடந்த 6ஆம் தேதி சுப்பிரமணி தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவிட்டு 8ஆம் தேதிதான் அவர் மரணம் நடந்துள்ளது. இந்த பின்னணியில் அவரது கடிதம், அவரது குடும்பத்தினருக்கு தெரிந்ததா இல்லையா என்பது யாருக்கும் தெரியவில்லை.
வற்புறுத்தினார்களா?
6ஆம் தேதியே கூரியர், போஸ்டில் அனுப்பியிருந்தால் 7ஆம் தேதியே பலருக்கும் கிடைத்திருக்கும் ஆனால் சுப்ரமணியம் மரணமடைந்தது 8ஆம்தேதிதான் இதுவே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவராக தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையெனில் யாரும் வற்புறுத்தினார்களா என்று சுப்ரமணியத்தின் நண்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
நெருக்கடி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பணம் காண்டராக்டர் சுப்ரமணியம் மூலம்தான் நடந்துள்ளதாகவும், இதை தோண்டி துருவினால் முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் சிக்குவார்கள் என்றும், இது பற்றி வெளியே கூறாமல் இருக்க யாரோ கொடுத்த நெருக்கடியே சுப்ரமணியம் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விசாரணையில் விடை கிடைக்குமா?
சுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்ட வழக்கு இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் உண்மையானதுதான் என்பதை விசாரித்து அவரது மரணத்தில் உள்ள மர்மத்திற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பலரின் வலியுறுத்தல்.
மாஜி அமைச்சர் பழனியப்பன் சிக்குகிறார்
சுப்ரமணியம் எழுதியதாக கூறப்படும் அந்த கடிதத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பழனியப்பனும், சில அதிகாரிகளும், கான்ட்ராக்டர் பி.எஸ்.கே. தென்னரசுவுக்கு உதவி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே கடந்த 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நடந்த தில்லுமுல்லுகள் என்னென்ன என்பது பற்றி வருமான வரித்துறையினர் தோண்டி துருவ உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தோண்ட தோண்ட பூதம்
சுப்ரமணியத்தின் தற்கொலை விவகாரம் கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக மாறியுள்ளது. இன்னும் எத்தனை விவகாரங்கள் கிளம்புமோ? யார் யார் சிக்குவார்களோ என்ற பீதி கிளம்பியுள்ளது.