சுப்ரமணியம் எழுதிய கடிதம் எங்கே?... குடும்பத்தினரிடம் போலீஸ் தொடர் விசாரணை
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியம் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாமக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது வீட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். சுப்பிரமணியம் மனைவி சாந்தி, மகன் சபரீசனிடமும் மோகனூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை மேற்கொண்டார்.
நாமக்கல் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் காண்டிராக்டர் சுப்ரமணியம் செவிட்டுரங்கன் பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே அன்று இரவே அவசரம், அவசரமாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஐடி ரெய்டு
கடந்த 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், குவாரிகளில் வருமான வரி சோதனை நடந்த போது நாமக்கல்லில் உள்ள அவரது நண்பர் சுப்பிரமணியம் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் விசாரணை
இதையடுத்து வருமானத் துறை அதிகாரிகள் சுப்ரமணியத்தை 2 முறை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை சுப்ரமணியம் கூறியதால் வருமான வரித்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். அவரது வங்கி கணக்குள் முடக்கப்பட்டு அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
விஷம் குடித்து தற்கொலை
திங்கட்கிழமையன்று வருமான வரித்துறையினர் சுப்ரமணியனை விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனால் அவரை தொடர்பு கொண்ட முக்கிய புள்ளிகள் உண்மைகளை சொல்லக்கூடாது என்று நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுப்ரமணியம் மன உளைச்சலில் தவித்தாராம்
இந்த நிலையில் அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணை
சுப்ரமணியன் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது மனைவி சாந்தி, மகள் அபிராமி, மகன் சபரி மற்றும் வீட்டில் வேலை பார்த்த பெண், நண்பர்களிடமும் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பண்ணை வீட்டில் வேலை பார்த்த ரத்தினம் என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, சுப்ரமணியம் தற்கொலை செய்வதற்கு முந்தைய நாளான 7ஆம் தேதி பண்ணை வீட்டில் உள்ள மரத்தடியில் பல மணி நேரம் அமர்ந்து பக்கம், பக்கமாக கடிதம் எழுதியதாக கூறி உள்ளார்.
தற்கொலை கடிதம்
மேலும் அந்த கடிதத்தை கைப்பற்றியது யார் , அதனை மறைக்க காரணம் என்ன? தற்போது அந்த கடிதம் எங்கு உள்ளது, அதில் என்ன விவரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கிய தலைகள் உருளும்
இந்த நிலையில் இன்று மீண்டும் சுப்ரமணியம் வீட்டிற்கு வந்த இன்ஸ்பெக்டர் இளங்கோ, சுப்ரமணியம் மரணத்திற்கு முன்பாக எழுதிய கடிதம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுப்பிரமணியம் மனைவி சாந்தி, மகன் சபரீசனிடமும் விசாரணை நடத்திய போலீசார், தற்கொலைக்கான காரணம், தனது சொத்துக்கள் குறித்து ஏதேனும் எழுதி வைத்திருந்தாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் அளிக்கும் பதிலின் மூலம் சுப்ரமணியம் தற்கொலை விவகாரத்தில் மேலும் பல தலைகள் உருளும் என்றே கூறப்படுகிறது.