என் தற்கொலைக்கு காரணம் இருவர்தான்... வெளியானது வில்லங்க விஜயாபாஸ்கர் கூட்டாளி சுப்பிரமணியம் கடிதம்!
தனது தற்கொலை முடிவுக்கு பி.எஸ்.கே தென்னரசு என்பவரும் வருமான வரித்துறை அதிகாரி கார்த்திக் மாணிக்கம் என்பவரும் தான் காரணம் என்று சுப்ரமணியம் எழுதியுள்ளார்.
சென்னை: விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியம் தற்கொலைக்கு முன்னதாக எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியாகியுள்ளது. அதில் தனது தற்கொலை முடிவுக்கு மற்றொரு கான்ட்ராக்டரான பி.எஸ்.கே தென்னரசு என்பவரும் வருமான வரித்துறை அதிகாரி கார்த்திக் மாணிக்கம் என்பவரும் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சுப்ரமணியம் கடந்த 8ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 6ஆம் தேதியே கடிதம் எழுதி அதனை உறவினர்களுக்கு போஸ்ட் செய்துள்ளார். 4 பக்கங்களில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
|
கஷ்டப்பட்டு முன்னேறினேன்
விவசாய குடும்பத்தில் பிறந்த நான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறினேன். யாருடைய பணத்திற்கும் ஆசைப்பட்டதில்லை.
அம்மா, அப்பா கொடுத்த பணத்தில் தொழில் செய்து வந்தேன். யாரிடமும் கெட்டவன் என்று பெயர் எடுத்ததில்லை. என் திருமணத்திற்குப் பின்னர் மாமனார் கொடுத்த பணத்தை கொண்டு 1992 முதல் தொழில் செய்து வருகிறேன். எனது இரண்டு குழந்தைகளை நன்கு படிக்க வைத்தேன்.
நல்ல பெயர் உள்ளது
எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தனர். தொழிலில் நல்ல பெயர் இருந்ததால் முன்னேறி வந்தேன். பிஎஸ்கே தென்னரசு என்பவர் தனக்கு பல வழிகளில் இடைஞ்சல் செய்தார். பல மாவட்டங்களில் கட்டடம் கட்டி கொடுத்தோம். கடந்த ஆண்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டெண்டர் எடுத்து வேகமாக கட்டி கொடுத்தேன்.
மன உளைச்சல்
பிஎஸ்கே தென்னரசு கொடுத்த தொந்தரவினால் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நட்பு இருப்பதாகவும், அவர் கொடுத்த பணத்தில்தான் நான் தொழில் செய்வதாகவும் கதை கட்டி விட்டனர்.
வருமான வரி சோதனை
பிஎஸ்கே தென்னரசுதான் என் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்குக் காரணம். நான் அமைச்சரின் பினாமி என்றும் என் வீட்டில் தங்கக் கட்டிகள், பணம் உள்ளதாக சொல்லி பெயரை கெடுத்து விட்டனர்.
தற்கொலை எண்ணம்
கடந்த 25 நாட்களாக டிவியில் எனது பெயரை டிவியில் போட்டதால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தூங்கமுடியாமல் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டேன். அப்போதே உயிரை விட்டு விடலாம் என்று முடிவு செய்தேன்.
வருமான வரி அதிகாரி
கடந்த 27ந் தேதி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து காலை பதினொரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை வருமானவரித்துறையின் துணை இயக்குனர் கார்த்திக் மாணிக்கம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அதிகாரி கார்த்திக் மாணிக்கம் மிகவும் ஆபாசமாக வசை பாடியதுடன், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பணம் கொடுத்ததாக ஒப்புக் கொள்ளும்படி மிரட்டல் விடுத்தார்.
தற்கொலைக்கு காரணம்
கான்ட்ராக்டர் பி.எஸ்.கே. தென்னரசு மற்றும் வருமான வரித்துறை துணை இயக்குனர் கார்த்திக் மாணிக்கம் ஆகியோர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று சுப்ரமணியம் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உறுதியுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் தர வேண்டாம் என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.
கடிதம் உண்மையா?
இதனிடையே தென்னரசு தனது தொழிலுக்கு இடையூறு செய்ததால் தற்கொலை செய்து கொள்வதாக சுப்ரமணி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உண்மைகள் முழுவதுமாக தெரிவிக்கப்படவில்லை என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
விசாரணை தேவை
உண்மையை முழுவதுமாக கடிதத்தின் மூலம் தெரிவித்தால், தான் தற்கொலை செய்து கொண்ட பிறகு தனது குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்படலாம் என்பதால் பல தகவல்களை சுப்ரமணியம் மறைத்திருக்கலாம் என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சுப்ரமணியம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவரிடம் தொலைபேசி மூலமும், நேராகவும் பேசியவர்களின் விவரத்தை ஆராய்ந்தால், பல உண்மைகள் வெளிவரும் என்றும் கூறுகின்றனர்.