9 ஆண்டுகளாக நீடிக்கும் 'பொட்டு அம்மான்' மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி?
பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக இண்டர்போல் கூறும் தகவலை உறுதி செய்கிறாரா சு.சுவாமி என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் எங்கே என்பது குறித்த மர்மம் 9 ஆண்டுகளாக நீடிக்கிறது. பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்; தேடப்படும் நபர் என சில ஆண்டுகளுக்கு முன் இண்டர்போல் கூறியதை உறுதி செய்யும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் பதிவைப் போட்டிருக்கிறார்.
பொட்டு அம்மான்... தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர்.. மாத்தையாவுக்குப் பின் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நிழல்.
தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே முப்படைகளையும் வைத்திருந்தவர் பிரபாகரன். குறைவான எண்ணிக்கையில் விடுதலைப் புலிகள் இருந்த போதும் அந்த இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு அபாரமாக செயலாற்றியது.
பிரபாகரனின் நிழல்
அப்படியான புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக செயல்பட்டவர் பொட்டு அம்மான். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மரணித்துவிட்டதாக இலங்கை ராணுவம் ஒரு சடலத்தைக் காட்டியது. இதை பலரும் இன்றுவரை நம்பவோ ஏற்கவோ இல்லை.
பொட்டு அம்மான் எங்கே?
பல மூத்த தளபதிகளின் சடலங்களையும் காட்டியது சிங்கள ராணுவம். ஆனால் பொட்டு அம்மான் பற்றிய தகவல் மட்டும் 9 ஆண்டுகளாக தொடர்ந்து மர்மமாக நீடித்து வருகிறது.
கருணா உறுதி செய்யவில்லை
சில ஆண்டுகளுக்கு முன்னர் பொட்டு அம்மான் ஹாங்ஹாங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் பொட்டு அம்மான் மரணித்துவிட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்திருந்தார் விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து போன கருணா.
உயிருடன் பொட்டு அம்மான்
அத்துடன் பொட்டு அம்மான் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு அமைப்பு மீண்டும் இயங்குகிறது என 2 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இண்டர்போல் அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மான் பெயரும் இடம் பெற பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இண்டர்போல் தகவல் கன்பார்ம்?
பிரபாகரன் குறித்த தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில் 9 ஆண்டுகளாக பொட்டு அம்மான் குறித்து அவ்வப்போது ஏதேனும் ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார். இப்பதிவும் இண்டர்போலின் கருத்தை உறுதி செய்வதாக அதாவது பொட்டு அம்மான் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது என்கின்றனர் தமிழ்த் தேசியவாதிகள்.