நிதி ஒதுக்காத தமிழக அரசு.. ரேஷனில் நிறுத்தப்பட்ட பருப்பு, பாமாயில்.. அவதியில் மக்கள்!
தமிழக அரசு நிதி ஒதுக்காததால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நிதி ஒதுக்காததே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை, கோதுமை, மண்எண்ணெய் ஆகிய பொருட்கள் மானியவிலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிச்சந்தையில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி சென்னையில் செயல்படுத்தியது.
அதே ஆண்டு மே மாதத்தில் பிற மாவட்டங்களிலும் சிறப்பு பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.
அண்டை மாநிலங்களிலிருந்து கொள்முதல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒவ்வொரு மாதமும் 13 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 7 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பு, 15 ஆயிரம் கிலோ லிட்டர் பாமாயில் ஆகியவற்றை அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்கியது.
மானிய விலையில் பருப்பு, பாமாயில்
அதன்படி ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உளுந்தம் பருப்பு 30 ரூபாய்க்கும், பாமாயில் ஒரு கிலோ ரூ.25 க்கும் மானியவிலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வந்தனர்.
அரசு நிதி ஒதுக்க வில்லை
சிறப்பு பொது வினியோக திட்டத்தை கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு சுமார் ரூ.1,158 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் 2016-17-ம் நிதி ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனத் தெரிகிறது.
நிறுத்தப்பட்ட பருப்பு, பாமாயில்
இதனால் பருப்பு வகைகள், பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த பருப்பு வகைகள், பாமாயில் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.