சிக்னல் கோளாறு.. சென்னையில் மின்சார ரயில்கள் தாமதம் - பயணிகள் தவிப்பு
சென்னையில் பல்லாவரம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் மார்க்கமாக தினசரி ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரியும் ஆயிரக்கணக்கான மக்கள் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்து திரும்புகின்றனர்.
பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுவதை விட புறநகர் ரயில்களில் செல்வது சிரமம் இல்லாத பயணம் என்பதால் பலரும் மின்சார ரயில்களையே நாடுகின்றனர்.
இன்று காலையில் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. வேலைக்குச் செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். தகவல் அறிந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரி செய்து வருகின்றனர்.
அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் இருந்த பயணிகள் பேருந்துகளை பிடிக்க புறப்பட்டு சென்றனர். மின்சார ரயில்கள் போக்குவரத்து தடைபட்டதால் தாம்பரம் - பிராட்வே இடையேயான பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.