மார்ஸ்க்கு போன மங்கள்யான்... இனி செவ்வாய் தோஷம் பற்றி பேசுவீங்க?
சென்னை: ஜாதகம், ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்களை பாடாய் படுத்துவது செவ்வாய் கிரக தோஷம். இந்த தோஷத்தினால் எத்தனையோ இளைஞர்கள், இளம்பெண்களின் திருமணம் தடைபட்டுக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கு செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யானை வெற்றிகரமாக அனுப்பியுள்ளோம். நமது விஞ்ஞானிகளின் வெற்றியைப் பற்றி ஒரு தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டிருந்த அதே நேரத்தில் செவ்வாய் கிரகம் பற்றியும், செவ்வாய் தோஷம் பற்றியும் பிரபல ஜோதிடர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எடுத்துக்கூறிக்கொண்டிருந்தார்.
செவ்வாய்க்கே செயற்கைகோள் போனாலும் செவ்வாய் தோஷம் என்றாலே கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர் நம்மவர்கள். நவகிரகங்களில் செவ்வாய் பற்றியும், செவ்வாய் தோஷம் பற்றியும் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்ளலாம்.
மங்களன்
மங்கள்யான் பற்றி சந்தோசமாக உரையாற்றிய பிரதமர் மோடி மங்கள், மங்கள் என்று மங்களகரமாக கூறினார். இந்த மங்களன் எனப்படும் செவ்வாயும் மங்களகரமான கிரகம்தான்.
ரொம்ப வேகமானவரு…
நவ கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிரகம் ஆகும். நெருப்புக்கு அதிபதியான செவ்வாய், ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கிறார்.
விவேகமான தைரியசாலி
வீர தீர செயல் புரிதல், அதிகாரம் செலுத்துதல், ஆளுமை திறன், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வளைந்து கொடுக்காத தன்மை, உயர் பதவி, தலைமை பொறுப்பு போன்றவற்றை ஒருவருக்கு தரக்கூடிய வல்லமை பெற்றவர் மிஸ்டர் செவ்வாய்.
செந்நிற செவ்வாய்
செவ்வாய் செந்நிறமானவர். நம் உடலில் உள்ள ரத்த அணுக்களுக்கு காரணமானவர். உத்யோகம், சகோதர உறவுகள், மரபணுக்கள், விந்தின் வேகம், வெறித்தனம், என பல செயல்களுக்கும் செவ்வாயே காரணம் என்கின்றனர் ஜோதிடர்கள்.
பூமி புத்திரன்
செந்நிற கிரகமான செவ்வாய்க்கு அங்காரகன், குஜன், பவுமன், பூமி புத்ரன் என பல பெயர்கள் இருக்கின்றன. நவ கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்றும் செவ்வாயை கூறுகின்றனர்.
வீடு, நிலம் வாங்க
பூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான். ருணம் என்று சொல்லப்படும் கடனுக்கும் செவ்வாய்தான் அதிபதி. விபத்து மற்றும் அடிதடியால் ஏற்படும் காயம், ரணம், கட்டி முதலியவற்றிற்கும் செவ்வாய்தான் காரணம்.
திருமணத்தடை
செவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். இந்த தோஷத்திற்கு விதிவிலக்குகளையும் தெரிவித்துள்ளனர் ஜோதிடர்கள்
தமிழ்நாட்டின் கிரகம்
செவ்வாய் தமிழ்நாட்டுக்குடைய கிரகம். செவ்வாயால் திருமணம் தடைபட்டிருப்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவில், பழனி ஆகிய கோவில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளைப் புரிந்து பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்
ரோம் நகரில் வழிபாடு
ரோம் நகரத்தினர் செவ்வாயைப் போர்க் கடவுளாக வணங்குகிறார்கள். செவ்வாய்க்கு பல கோவில்களையும் ரோமாபுரியில் கட்டியிருக்கிறார்கள். செவ்வாயை தளபதியாக ஏற்றுக் கொண்டால் யுத்தத்தில் வெற்றி என நம்புகிறார்கள்.
மார்ஸ்க்கு போனாலும்...
தோஷம்னு வந்தா சில பரிகாரம் செய்யத்தான் வேணும் என்று சில ஜோதிடர்கள் கூறத்தான் செய்வார்கள். எதற்கு வம்பு.. லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்யப்போகிறோம், அதில் சில ஆயிரம் பரிகாரத்திற்கு செலவு செய்தால் தப்பில்லை என்று நினைத்தால் ஜோதிடருக்கு பணத்தை கொடுங்கள். இல்லையா, செவ்வாய்க்கே செயற்கைகோள் விட்டாச்சு தோஷமாவது, பரிகாரமாவது என்று நம்பிக்கையோடு நடையைக் கட்டுங்கள்.