ஆயிலை விட்டுவிட்டு தண்ணீரை உறிஞ்சிய அதி நவீன மெஷின்.. கைவிரித்த அதிகாரிகள் #ChennaiOilSpill
சென்னை: கப்பல்கள் இரண்டு மோதிக்கொண்டதால் ஏற்பட்ட எண்ணை கசிவு கடலில் கலந்ததால் மெரினா உட்பட சென்னை கடற்கரை முழுக்க எண்ணை படலமாகிவிட்டது. இவற்றை முற்றிலும் சுத்தப்படுத்தி அகற்றுவதில் அதிகாரிகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார்கள்.
கடந்த சனிக்கிழமை இரு கப்பல்கள் மோதிக்கொண்டபோது அதிலிருந்த ஆயில் கடலில் கொட்டியதால் இந்த விபரீதம் நேர்ந்தது.
இதுவரை அரை டஜன் ஆமைகள் செத்து கரை ஒதுங்கியுள்ளன. இதேபோல மேலும் பல கடல் வாழ் உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழக்க அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கிறார்கள் கடல்சார் உயிரி ஆய்வாளர்கள்.
மீன் வியாபாரம்
இந்த அச்சத்தால் மீன் விற்பனையும் படு மந்தமாகிவிட்டது. மீன் வியாபாரம் செய்யும் பெண் ஒருவர் கூறுகையில், தன்னிடம் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மீன் இருந்ததாகவும், ஆனால் 2000 மதிப்புள்ள மீன்கள்தான் விற்றுள்ளதாகவும், எஞ்சியவை நஷ்டம்தான் என்றும் கூறினார். மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம்தான் மீன் விற்பனை குறைவுக்கு காரணம்.
அதி நவீன மெஷினாம்
கடலில் பரவியுள்ள எண்ணை படிவத்தை அகற்ற suction machine என்ற ஒரு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம், அனைத்து எண்ணை கசடுகளையும் அகற்றிவிடும் என்று மிகுந்த நம்பிக்கையிருந்தது. ஆனால் நடந்ததோ வேறு. கசடுகளை இழுத்து எடுப்பதற்கு பதிலாக கடல் தண்ணீரைத்தான் இழுத்து வெளிக்கொண்டு வந்தது இந்த இயந்திரம். எனவே அந்த திட்டம் கைவிடப்பட்டது.
தன் கையே தனக்கு உதவி
இப்போது மனிதர்களை கொண்டு கடலை சுத்தப்படுத்தும் வேலையை மட்டுமே அதிகாரிகள் மேற்கொள்கிறார்கள். ஆனால் கைகளில் கறைபோல ஒட்டிப்பிடித்துக்கொள்கிறது இந்த ஆயில். "ரொம் நாற்றெடுக்குது. கைலல்லாம் பச மாதிரி ஒட்டுது. இருந்தாலும், மக்கள் நல்லா இருக்கனும்ங்கிறதுக்காக சந்தோஷமாக செய்றோம்" என்கிறார் தொழிலாளி அமாவாசை.
ஹெலிகாப்டர் ரோந்து
கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர்கள் அவ்வப்போது கடலுக்கு மேல் பறந்து சென்று எண்ணை படலம் எவ்வளவு தூரத்திற்கு விரிவடைந்துள்ளது என்பதை கண்காணித்தபடி உள்ளது. கடலோர காவல் படை கப்பலான வர்தா இன்று சுத்தப்படுத்தும் பணியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய ஹெலிகாப்டரும் இணைக்கப்பட்டுள்ளது.
பல துறை
கடலோர காவல்படை தவிர்த்து, தீயணைப்பு வீரர்கள், துறைமுக அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர்களும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வல இளைஞர், இளம் பெண்களும் கடற்கரை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.