உடலை குண்டாக்க சென்னை வந்து தெருத் தெருவாக ஜட்டியுடன் அலைந்த சூடான் வாலிபர்!
சென்னை: தனது உடலை பெருக்க விரும்பி சென்னைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்த சூடான் நாட்டு வாலிபர் ஒருவர் எல்லாவற்றையும் இழந்து, தனது உடையையும் இழந்து வெறும் ஜட்டியுடன் சென்னை நகர வீதிகளில் சுற்றும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அவரை போலீஸார் மீட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்தையும் அவர் பறி கொடுத்ததால் தாயகம் திரும்ப முடியாமல் தெருவில் அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கடைசியில் அவரை மாதவரம் போலீஸார் மீட்டு சொந்தக் காசைப் போட்டும், பிற ஏற்பாடுகள் மூலமும் அவரை சூடானுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
தெருவில் சுற்றிய வாலிபர்
சென்னை மாதவரம் பகுதியில் வெறும் ஜட்டியுடன் ஆப்பிரிக்கர் ஒருவர் சுற்றுவதாக போலீஸாருக்குத் தகவல் வரவே அவர்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர்.
விசாரணை
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பேசியது போலீஸாருக்குப் புரியவில்லை. ஆங்கிலத்தில் பேசினார் அந்த நபருக்குப் புரியவில்லை.
நைஜீரியாக்காரர் மூலம்
இதையடுத்து அப்பகுதியில் வசித்து வரும் நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவரை அழைத்து வந்து அவர் மூலம் விசாரித்தனர். அதில் சூடானைச் சேர்ந்தவர் அந்த நபர் என்பது மட்டும் தெரிய வந்தது. சூடான் வாலிபர் பேசியது நைஜீரியருக்குப் புரியவில்லை.
கல்லூரி மாணவர் மூலம்
இதையடுத்து ஒரு கல்லூரியில் படித்து வரும் சூடான் மாணவரை வரவழைத்தனர். அப்போதுதான் முழு விவரமும் தெரிய வந்தது.
சிகிச்சைக்காக வந்தவர்
சூடான் வாலிபர் ஒரு புரோக்கர் மூலம் உடலை பெருக்கும் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் அனுப்பி வைத்த புரோக்கர் அவரை மோசடி செய்து விட்டார்.
மாடுகளை வைத்துப் பிழைப்பு நடத்தியவர்
சூடானில் இவருக்குச் சொந்தமாக 30 மாடுகள் இருந்ததாம். ஆனால் உடலைப் பெருக்கும் ஆசையால் அவற்றை விற்று விட்டு சென்னைக்கு வந்துள்ளார் இவர்.
வந்த இடத்தில் சந்தித்த சிக்கல்
சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் போய் தங்க அறை கேட்டுள்ளார். ஆனால் இவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் அறை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் வாக்குவாதத்தில் சூடான்காரர் ஈடுபட்டுள்ளார். கிண்டி போலீஸார் வந்துள்ளனர். அவர்கள் இவரை விமான நிலையத்தில் கொண்டு போய் விட்டு விடுமாறு கூறி விட்டுப் போய் விட்டார்கள்.. எவ்வளவு பொறுப்பு பாருங்க!
திருடர்களிடம் சிக்கினார்
விமான நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்ட சூடான்காரர் விமானத்தில் போக காசு இல்லாமல் அங்கேயே சுற்றியுள்ளார். அபபோது திருடர்களிடம் சிக்கிக் கொண்டார். அவர்கள் பணம், பாஸ்போர்ட், விசா, டிரஸ்ஸைக் கூட விடாமல் பறித்துக் கொண்டு விட்டனர்.
ஜட்டி மட்டுமே மிச்சம்
வெறும் ஜட்டியுடன் விடப்பட்ட சூடான்காரர் அங்குமிங்கும் சுற்றி கடைசியில் மாதவரம் வந்து சேர்ந்தார். போலீஸாரிடம் சிக்கினார்.
கைக்காசைக் கொடுத்த இன்ஸ்பெக்டர்
இதையடுத்து இவரை தாயகத்திற்கு அனுப்புவதற்காக டெல்லியில் உள்ள சூடான் தூதரகத்துடன் தொடர்பு கொண்ட போலீஸ் அதிகாரிகள் விவரத்தை் சொல்லி மாற்று பாஸ்போர்ட், விசா பெற்றனர். பின்னர் மாதவரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரூ. 10,000 பணத்தை இவரிடம் கொடுத்து விமான நிலையம் வரை அனுப்பி வைத்து நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.