குமரியை நள்ளிரவில் குளிர்வித்த “ஜில் ஜில்” சாரல்- 2 மாத வெயிலுக்குப் பிறகு!
நாகை: குமரி மாவட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவில் திடீரென்று விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததது.
அங்கு கடந்த 2 மாதமாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும், அனல்காற்றும் வீசிவருகிறது.
அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. காலை 7 மணி வரை பனிப்பொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் முன்முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்கின்றனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் நேற்று இரவு திடீரென சாரல் மழை பெய்தது. கொட்டாரம் பகுதியில் அதிகாலை 2.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டியது.
அங்கு அதிகபட்சமாக 18 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் வரத்து அதிகரித்து உள்ளது.
மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையிலும் லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் வழக்கம் போல் வெயில் அடிக்க ஆரம்பித்தது.