இருளில் மூழ்கியது சென்னை.. அமைச்சர் தங்கமணி சொன்ன விளக்கம் இது தான் !
இரவில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியது.
சென்னை: சென்னையில் நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மின் விசிறி, குளிர்சாதன வசதிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் மின் தேவையும் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டது. சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, கொளத்தூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதேபோல் புறநகர் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. சென்ட்ரல், பேசின்பிரிட்ஜ், வால்டாக்ஸ் சாலை, வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் மின்வாரிய ஊழியரை சிறைபிடித்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. 95 சதவீத பகுதிகளில் மின்வெட்டு சரிசெய்யப்பட்டு விட்டது.
தொடர்ந்து அதிகாரிகளும், ஊழியர்களும் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உள்ளது. வெயிலின் தாக்கத்தினால் தொழில் நுட்பகோளாறு ஏற்படுகிறது. கொடுங்கையூரை பொறுத்த வரை டிரான்ஸ் பார்ம் பழுதடைந்துவிட்டது. அதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.