சென்னையில் திடீர் மழை.. கத்திரியின் தொடக்கத்தில் சந்தோஷத்தில் நனைந்த மக்கள்!
சென்னை: கடும் வெயிலில் சுருண்டு கிடந்த சென்னை மக்களுக்கு கத்திரி எனப்படும் அக்னிநட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே காலையில் வெளுத்த இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இன்று கத்திரி வேறு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களிலும் தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
அதேசமயம், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் தொடர்ந்து தகித்து வந்தன. இந்த நிலையில் இன்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. கால் மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.
காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த மழை சீரான வேகத்தில் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தக் கோடை மழையால் கத்திரி வெயிலின் முதல் நாளை சற்று இளைப்பாறுதலுடன் கடக்கலாம் என்ற ஆறுதல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்தமே காரணம்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக இந்த மழை பெய்திருக்கலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதேசமயம், தென்மாவட்டங்களில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையும், ஒரு சில இடங்களில் கன மழையும் மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வராது வந்த மா மழையால் சென்னை மக்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.
3 நாட்களுக்கு மழை நீடிக்குமாம்
இதற்கிடையே, தமிழகத்தில் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தின் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 17.3 மி.மீ., கொடைக்கானலில் 15.6 மி.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் 10.7, புதுச்சேரி 6.3, பாம்பன் 4.2, அதிராம்பட்டணம் 4.4, காரைக்கால் 1.5., மதுரை, பாளையங்கோட்டையில் தலா 1.2, தூத்துக்குடியில் .9 மி.மீ மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.