சுள்ளென்று அடித்த வெயில் ஓடியது.. ஜில்லென்ற மழையில் நனைந்தது சென்னை!
சென்னை: சென்னையில் இன்று காலை நேரத்தில் பெய்த திடீர்மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
தமிழ்நாட்டில், வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் சிறிய அளவில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனாலும் நேற்று காலை முதலே வெயில் கொளுத்தியது. அனல் காற்றும் வீசியது. மாலை நேரத்தில் வானிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது குளிர்ந்த காற்றும் வீசியது.
இந்தநிலையில் மயிலாப்பூர், மந்தைவெளி, கோபாலபுரம், உள்ளிட்ட இடங்களில் சாரலாக தொடங்கிய மழையின் வேகம் அதிகரித்தது. இதனையடுத்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. மேலும் சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையாறு ஆகிய இடங்களிலும் சாரல் மழை பெய்தது. நகரின் பலஇடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
நேற்றுவரை கொளுத்திய வெயிலுக்கு திடீரென பெய்த மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவது இதமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரைப் போலவே புறநகரான தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்துள்ளது. தொடர்ந்து மேகமூட்டமாக உள்ளது.