தோல்வி.. எல்லா கருத்து கணிப்புகளிலும் 'பெயில்' ஆன விஜயகாந்த் மச்சான் 'சுதீஷ்'!
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் சேலத்தில் தோல்வியைச் சந்திப்பர் என்றே கூறுகின்றன.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, திமுக என மூன்று கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டியது தேமுதிக. இதில் முனைப்பாக இருந்தவர் சுதீஷ்.
ஒருவழியாக பெரும் போராட்டத்துக்குப் பின்னர் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. ஆனாலும் அதன் மற்றொரு கூட்டணிக் கட்சியான பாமகவின் சில தொகுதிகளை கபளீகரம் செய்து கொண்டது தேமுதிக.
பாமகவிடம் இருந்து அபகரித்த சேலம்
அப்படி தேமுதிக, கபளீகரம் செய்து கொண்ட பாமகவின் முக்கிய தொகுதிகளில் ஒன்று சேலம். இந்த சேலம் தொகுதியில் பாமகவின் அருள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் இந்த தொகுதி தங்களுக்குத்தான் வேண்டும் என்று தேமுதிக அடம்பிடித்தது.
சீறிய ராமதாஸ்
இதைக் குறிப்பிட்டுப் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சிங்கங்கள் சிறுநரியிடம் பிச்சை கேட்கலாமா? அருள் நீதாண்டா அங்கு வேட்பாளர் என்று பிரகடனமே செய்தார். ஆனால் கூட்டணி பேரங்களில் அருள் வீழ்த்தப்பட்டார். தேமுதிக கைக்குப் போனது சேலம். அப்படி அடித்து பிடித்து வாங்கிய சேலம்தான் தேமுதிகவுக்கு மரண அடியை கொடுக்கப் போகிறது என்கிறது கருத்து கணிப்புகள்.
வன்னியர் வாக்குகள்..
சேலத்தைப் பொறுத்தவரையில் வன்னியர்களே தீர்மானிக்கும் சக்திகள். இத்தொகுதியில் சிட்டிங் எம்.பி.யான செம்மலையை தூக்கிவிட்டு வன்னியர் பன்னீர்செல்வத்தை அதிமுக வேட்பாளராக நிறுத்தியது.
திமுகவின் உமாராணி
திமுக சார்பில் அக்கட்சியின் வன்னியர் முகமாக கருதப்படும் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் நிறுத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த உமாராணி நிறுத்தப்பட்டடார். தொடக்கத்தில் வீரபாண்டி ஆறுமுகம் மகன் ராஜா, அவரது உட்கட்சி எதிரி பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் இருவருமே உமாராணியை எதிர்த்தாலும் ஸ்டாலினின் சேலம் வருகைக்குப் பின்னர் எல்லாரும் இணைந்து பணியாற்றும் நிலை உருவானது.
தேமுதிகவின் கால்குலேஷன்
இந்த தொகுதியில் வன்னியர்கள் வாக்குகளை எப்படியும் அறுவடை செய்துவிடுவது என்றுதான் பாமக கணக்குப் போட்டு அருளை களமிறக்கியது. ஆனால் தேமுதிகவோ, ஆடிட்டர் ரமேஷ் கொலையால் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் அனுதாபம், பாமகவுடன் கூட்டணி வைப்பதால் கிடைக்கும் வன்னியர் வாக்கு, தங்களுக்கு இருக்கும் கட்சி செல்வாக்கு எல்லாமுமே வெற்றிக் கனியைத் தரும் என்று கணக்குப் போட்டது. அதனாலேயே அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷே இத்தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவித்தது.
தந்தி டிவி
தந்தி டிவி தொடக்கத்தில் சேலம் மக்களவை தொகுதியை அலசி ஆராயும் போது அதிமுக முதலிடம் 2வது இடத்துக்கான வாய்ப்பை தேமுதிகவுக்கு கொடுத்தது. ஆனால் நேற்றைய இறுதி கணிப்பில் சுதீஷ் டவுட் என்றே சொல்லிவிட்டது.
அடித்து சொல்லும் நக்கீரன், ஜூவி
வாரம் இருமுறை இதழ்களான நக்கீரனும் ஜூனியர் விகடனும் சுதீஷ் வெல்லவே வாய்ப்பு இல்லை என்பதை கடந்த வாரம் இந்த வாரமும் பதிவு செய்து இருக்கின்றன. சரி கருத்து கணிப்புகள் என்னதான் சொல்லுகின்றன..
அதிமுகவுக்கே வாய்ப்பு?
அதிமுகவைப் பொறுத்தவரையில் வன்னியர் வாக்குகள் பெரும்பான்மையாக கிடைக்கக் கூடிய நிலைமைதான் இருக்கிறது. இதைத்தான் அனைத்து கருத்து கணிப்புகளும் சொல்லுகின்றன.
திமுக நிலைமை
அதே நேரத்தில் 2வது இடத்துக்கு வந்து கொண்டிருக்கும் உமாராணிக்கு இதர சமூகத்தினர் வாக்குகள் பெரும்பான்மையாக கிடைப்பதும் உறுதியாகி இருக்கிறது. அத்துடன் உள்ளூரில் நன்கு அறிமுகமான சமூக சேவகர் என்பதும் அவருக்கு கை கொடுக்கவே செய்கிறது.
பரிதாப தேமுதிக
ஆனால் பாமகவிடம் இருந்து தொகுதியை அடித்துப் பிடித்து பறித்துக் கொண்டதால் வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையிலும் கூட துளியளவுக்கும் சமாதானத்துக்கு பாமகவினர் தயாராகவில்லை. தற்போதைய நிலையில் பாஜக மற்றும் தேமுதிகவினர் வாக்குகள் மட்டுமே சுதீஷுக்கு கிடைக்கும் நிலை.
திமுகவுக்கு பாமக மறைமுக ஆதரவு?
மேலும் தேமுதிக மீது அதிருப்தியில் இருக்கும் பாமக வன்னியர்கள் - அதிமுகவையோ தேமுதிகவையோ ஆதரிக்க முடியாத நிலையில் இயல்பாகவே திமுகவுக்கு வாக்களிக்கும் சூழல் உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பாமகவினர் திமுக வேட்பாளர் உமாராணியை ஆதரிக்கும் நிலைமையும் இருப்பதால் அவருக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்கின்றன கணிப்புகள்.
சுதீஷ் 'அவுட்'
எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அதிமுக அல்லது திமுகதான் இந்த தொகுதியில் வெல்ல முடியுமே தவிர சுதீஷ் நிச்சயம் ஜெயிக்கவே முடியாது என்றுதான் அடித்து சொல்கின்றன அத்தனை கருத்து கணிப்புகளும்.
ராங் கால்குலேஷனாகிடுச்சோ?