வேட்பாளர் பட்டியல்... "சிந்தித்து" செயல்பட்டுள்ளார் ஜெ... இப்படிப் பாராட்டுவது தேமுதிக சுதீஷ்!
சென்னை: தேமுதிகவில் இருந்து கட்சி மாறி அதிமுகவிற்கு சென்ற ஒன்பது பேரில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தராமல் அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா சிந்தித்து செயல்பட்டுள்ளதாக தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளர் சுதீஷ் "பாராட்டியுள்ளார்".
2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விஜயகாந்திற்குக் கிடைத்தது.
ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுக - தேமுதிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிகவில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அருள் சுப்பிரமணியன், சுரேஷ் குமார், அருண் பாண்டியன், மாஃபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், சுந்தரராஜன், தமிழழகன், சாந்தி ஆகியோர் தங்கள் கட்சி மீது அதிருப்தி அடைந்து, அதிமுகவிற்கு சாதகமாக பேசத் தொடங்கினர்.
ராஜினாமா...
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒன்பது பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் தங்களை அவர்கள் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதனால், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார் விஜயகாந்த்.
அதிமுக வேட்பாளர் பட்டியல்...
இந்த சூழ்நிலையில், அடுத்தமாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.
2 பேருக்கு வாய்ப்பு...
அதில், அதிமுகவில் இணைந்த தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 9 பேரில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், மாஃபா பாண்டியராஜனுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு சீட் தரவில்லை.
சுதீஷ் கருத்து...
இது தொடர்பாக தேமுதிக இளைஞரணி மாநில செயலாளரும், அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பல கட்சித் தாவியவர்கள்...
அதில் அவர், "தேமுதிகவில் இருந்து, ஒன்பது பேர் அதிமுகவுக்கு சென்றனர். இதில், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பாண்டியராஜனுக்கு, 'சீட்' வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள், பல்வேறு கட்சிகளில் இருந்துவிட்டு, அதிமுக பக்கம் தாவியவர்கள்.
தேமுதிக ரத்தம்...
ஆனால், சுந்தர்ராஜன், தமிழழகன், சாந்தி உள்ளிட்ட, ஏழு பேரும் பல ஆண்டு கால தேமுதிக உறுப்பினர்கள். இவர்கள் உடம்பில் ஓடியது முழுக்க, முழுக்க, தேமுதிக ரத்தம். கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, இவர்கள் அதிமுகவிற்கு சென்றனர். சொந்த கட்சிக்கு இவர்கள் துரோகம் செய்தனர். அதேபோல, அதிமுகவிற்கும் துரோகம் செய்யக் கூடும் என்று கருதி, அக்கட்சி தலைமை இவர்களுக்கு சீட் வழங்கவில்லை.
பாராட்டு...
இந்த விஷயத்தில், அதிமுக தலைமை தெளிவாக சிந்தித்து செயல்பட்டுள்ளது. எனவே, தேமுதிகவில் இருந்து, கட்சி மாறும் எண்ணத்தில் உள்ளவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். கட்சி மாறினால் இதே நிலைமை தான் ஏற்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.