கடலூரில் சாலை மறியல்- தொண்டர்களுடன் கைதான பிரேமலதா
கடலூர் நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காததைக் கண்டித்து கடலூர் நெல்லிக்குப்பத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போராட்டம் நடைபெற்றது. இதே போல ஆம்பரில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. கு.நல்லதம்பி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது கரும்பு நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி தேமுதிக நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.
அப்போது பிரேமலதா உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பிரேமலதாவிடமும், தேமுதிக தொண்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் போலீசார் பிரேமலதாவை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முழக்கமிடவே அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.