ரூ.2000 கோடி பாக்கி.. சென்னையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் கைது
நிலுவைத் தொகை வழங்கக் கோரி சென்னையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகை ரூ.2,000 கோடியை வழங்கக்கோரி சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டி உள்ளது. இந்த நிலுவைத் தொகையை கடந்த 3 ஆண்டுகளாக தர சர்க்கரை ஆலைகள் மறுத்து வருகின்றன. இதை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கையில் கரும்பை ஏந்தியபடி சர்க்கரை ஆலைகளுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் அரசு கூட்டுறவு சக்கரை ஆலைகள் 350 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளது. தனியார் சர்க்கரை ஆலை நிறுவனங்கள் 1,650 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. ஆக மொத்தம் 2,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பாக்கித் தொகை வழங்க வேண்டியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளின் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு தீர்வு காண மறுக்கிறது. சர்வதேச சந்தையில் 1 டன் சர்க்கரை 38,000 ரூபாய் வரை உயர்ந்தும் கூட விவசாயிகளின் பாக்கித் தொகையை வழங்க தனியார் சர்க்கரை நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை தர மறுக்கிறார்கள். விவசாயிகள் பயிரிடுவதற்காக அடமானம் வைத்த நகைகள் இன்று ஏலம் போயிக் கொண்டிருக்கின்றன.
கடனில் வாங்கிய டிராக்டர்களை சமூக விரோதிகள் மூலம் ஜப்தி செய்யப்படுகிறது. விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இன்று மாலைக்குள் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் பேசி, நிலுவைத் தொகையை அளிப்பது தொடர்பாக அமைச்சர்கள் உறுதி அளிக்க வேண்டும் எனக் கூறினார்.
இதனிடையே கரும்பு விவசாயிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து போராட்டத்தை தொடர முயன்ற 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.