சிறைக்குள்ளேயே “கரும்பு விவசாயம்” - திருச்சி கைதிகள் சாதனை; அறுவடை துவக்கம்!
திருச்சி: திருச்சி சிறை வளாகத்தில் கைதிகளால் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளை வெட்டும் பணி தொடங்கியுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதாகி அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகள், வழக்கு விசாரணை முடிவடைந்து அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை கைதிகள் உள்பட கிட்டதட்ட 1500 கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள் சிறைவாழ்க்கை முடிந்து வீடு திரும்பும்போது ஏதாவது தொழில் செய்து திருந்தி வாழவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சிறையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர சிறை வளாகத்தில் உள்ள தரிசு நிலத்தை செம்மைப்படுத்தி அந்த இடங்களில் காய்கறிகள் பயிரிட்டு தோட்ட வேலைகளை பராமரிக்கும் பணிகளையும் கைதிகள் செய்து வருகிறார்கள். கைதிகளால் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் சிறை முன்பாக "சிறை அங்காடி" என்ற வணிக வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் பயிரிடப்பட்டு அதனையும் கைதிகள் பராமரித்தார்கள்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்ய கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. சிறையில் உள்ள தண்டனை கைதிகள் இதற்கு முறையாக தண்ணீர் விட்டு பராமரித்து வந்தனர். தற்போது அந்த கரும்புகள் அறுவடைக்கு தயாரான நிலையை அடைந்து உள்ளதால் அவற்றை வெட்டும் பணி நேற்று தொடங்கியது. கைதிகள் நேற்று அந்த தோட்டத்தில் உள்ள கரும்புகளில் ஒரு பகுதியை வெட்டினார்கள். பொங்கல் பண்டிகையின்போது பயன்படுத்தும் மஞ்சள் கொத்துகளையும் மண்ணில் இருந்து பறித்து எடுத்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்து கரும்புகளும் வெட்டப்பட்டு சிறை அங்காடியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்தார்.