பொங்கல் பரிசும்... பொதுமக்களின் குமுறலும்!!
சென்னை: பொங்கல் வைக்க பச்சரிசியும் வெல்லமும் பாசிப்பருப்பும் கலந்தால் அது ருசிக்கும் பொங்கல். கூடவே நெய்யில் வறுத்துப்போட்ட முந்திரி,திராட்சை, ஏலக்காய் சேர்ந்தால் தித்திப்பு அதிகரிக்கும். பொங்கல் பண்டிகை கொண்டாட தயாராகி வருகிறது தமிழகம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.
பொங்கல் பண்டிகை கொண்டாடும் மக்களுக்காக பரிசு அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி கரும்பு கூடவே 100ரூபாய் வழங்கப்படும் என்று கூறி சில தினங்களுக்கு முன்பே அந்த திட்டத்தை தொடங்கியும் வைத்தார். இலவச வேட்டி, சேலை கொடுத்து முடிந்து ஓய்ந்து போய் உள்ள ஊழியர்கள் தலையில் பெரும் சுமையாய் வந்துள்ளது பொங்கல் பரிசு விநியோகம். ரேசன் கடைகளில் கியூவில் நிற்கும் பொதுமக்கள் பல இடங்களில் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரேசன் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை முதல் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியுள்ளது. கொஞ்சம் வரவேற்பு... நிறைய எதிர்ப்புக்கிடையே பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை பரிசுப்பொருட்கள் அடங்கிய பை அமைச்சர்கள் கொடுத்து வரும் நிலையில் இப்போது ரேசன் கடைகளில் வழக்கமாக போடும் பச்சரிசியும், சர்க்கரையும்தான் கொடுக்கின்றனர். இந்த ஆண்டு கூடுலாக இரண்டடி கரும்பு கொடுக்கப்படுகிறது. இந்த கரும்புதான் பல இடங்களில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ரேசன் கடை ஊழியருக்கு கத்திக்குத்தும் கிடைத்துள்ளது.
திமுகவின் பொங்கல் பரிசு
கடந்த, தி.மு.க.ஆட்சியில், ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு, பொங்கல் பரிசுப்பை வழங்கப்பட்டது. அதில், அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், 100 கிராம் பாசிப் பருப்பு முந்திரி, ஏலக்காய், திராட்சை தலா, 5 கிராம்' என, பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள் இருந்தன; ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பை வினியோகிக்கப்பட்டன.
பொங்கல் எப்படி வைக்க முடியுமா?
2011ம் ஆண்டு அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பொங்கல் பை வழங்குவது நிறுத்தப்பட்டது. பின்னர், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று 2013ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தார்.
2 அடி கரும்பு
2015ம் ஆண்டு ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவியை இழந்தார். இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளதால் 2016ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். இந்த ஆண்டு , பச்சரிசி, சர்க்கரையுடன் 100 ரூபாயும் கூடவே இந்த ஆண்டு 2 அடி கரும்பும் கொடுக்கின்றனர்.
நம்பர்வாரியாக விநியோகம்
பொங்கல் பரிசுவாங்க கல்போட்டு இடம் பிடித்தவர்கள் இருக்கின்றனர். இதனால்தான் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவே பொங்கல் பரிசு குடும்ப அட்டைகளின் நம்பர்வாரியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். எனவே அந்த குறிப்பட்ட எண் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே வரிசையில் நின்று தற்போது வாங்கிச் செல்கின்றனர்.
ஜெ படம் போட்ட கவர்
சில கடைகளில் பொதுமக்களுக்கு பணம் கொடுப்பதற்கான பணம் இருந்தது, ஆனால், முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்ட கவர் இல்லாததால் வழங்கும்பணி தாமதம் ஆனது. அதேபோன்று பச்சரிசி மற்றும் சர்க்கரை போட்டு வழங்குவதற்கான பொங்கல் பையும் பல கடைகளில் இல்லை. இதனால், பொதுமக்களுக்கு வழங்காமல் ஊழியர்கள் தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போலீஸ் பாதுகாப்பு
சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ரேசன் கடைகளிலும் பொங்கல் பை இன்று விநியோகிக்கப்பட்டது. இன்று விடுமுறை தினமென்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் பொங்கல் பை வாங்க காலை முதலே ரேசன் கடையில் கியூவில் நின்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீஸ் பாதுகாப்பும் இந்த ரேசன் கடைக்கு போடப்பட்டிருந்தது.
ஊழியருக்கு கத்திக்குத்து
பொங்கல் பையில், கரும்பு வைக்கப்படவில்லை என்பதால் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். ரேசன் கடையில் பணியில் இருந்த பெண் ஊழியர் உஷா, ''உள்ளே கரும்புத் துண்டுகளை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பொறுங்கள் எடுத்து தருகிறேன்" என்று பதில் அளித்தும் கேட்காத அந்த நபர் கத்தியால் வெட்டவே, உஷா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதனால் பொங்கல் பை வாங்க வந்திருந்த பொதுமக்கள், தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
பரிசாக கிடைத்த சிறை
கத்தியால் குத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரவியை மடக்கி பிடித்தனர். கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பொங்கல் பரிசு வாங்கப்போய் கடைசியில் காப்பு மாட்டிக்கொண்டு சிறைக்குப் போனார் அந்த நபர்.
பொதுமக்கள் குமுறல்
பொங்கல் பரிசு சிலருக்கு மகிழ்ச்சியைம், பலருக்கு குமுறலையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய பச்சரிசி... சர்க்கரை தர்றாங்க. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் தரலாமே என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது.
முழு கரும்பு கொடுக்கலாமே
2 அடி கரும்பு வச்சு எத்தனை பேர் சாப்பிடுறது. முழு கரும்பு கொடுக்கலாமே என்றும் கூறும் பொதுமக்கள் அடுத்த ஆண்டாவது முழு கரும்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
விக்கிற விலை வாசியில
பச்சரிசியும் சர்க்கரையும் கொடுக்கிறாங்க... 100 ரூபாய் கொடுக்கிறாங்க. விக்கிற விலைவாசியில இது எப்படி பத்தும் என்பது குடும்பத்தலைவிகளின் குமுறல்.
வெள்ளநிவாரணம் வரலையே
5000ரூபாய் வெள்ள நிவாரணம் இன்னும் வரலையே நாங்க இந்த 100 ரூபாயை வைத்து பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுறது என்று கேட்கின்றனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பொதுமக்கள்.
பொங்கலோ பொங்கல்
தானம் கொடுப்பதையோ பரிசாக கொடுப்பதையோ குற்றம் சொல்லக்கூடாது என்பார்கள். அதே நேரத்தில் இலவசம் என்பதற்காக எதையாவது கொடுத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதும் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.